Published : 29 Apr 2015 10:00 AM
Last Updated : 29 Apr 2015 10:00 AM

தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே 7 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு: கண்காணிப்பு கேமராவில் உருவம் பதிவானது

தேனாம்பேட்டை அண்ணா சாலையில் அடுத்தடுத்து 7 அலங்கார மின் விளக்கு கடைகளின் ஷட்டர் பூட்டை உடைத்து திருடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலை யில் தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே 20-க்கும் மேற்பட்ட அலங்கார மின் விளக்கு கடைகள் உள்ளன. ஒரு கடையைத் திறக்க நேற்று காலையில் ஊழியர் வந்தபோது, கடையின் ஷட்டர் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தெரிவித்தார். போலீஸார் வந்து ஆய்வு செய்தனர். அருகே உள்ள மற்ற கடைகளின் ஷட்டர் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்தனர். மொத்தம் 7 கடைகளில் திருட்டு நடந்திருப்பது தெரிய வந்தது.

கடைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் சிக்கி விடக்கூடாது என்று அந்த திரு டனும் உஷாராக இருந்துள்ளார். அதனால், ஒரு கடையில் இருந்த கேமராவை கம்பியால் அடித்து உடைத்திருக்கிறார். வேறொரு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் அவரது உருவம் பதிவாகி இருந்தது. முகமூடி அணிந்திருக்கும் அவர் பணம், பொருட்களை திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு போன பணம், பொருட்கள் குறித்த விவரங்கள் தெரியவில்லை.

தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி 7 வாக்கி டாக்கிகள் திருடப்பட்டன. அந்த வழக்கில் இன்னும் துப்பு கிடைக்காத நிலை யில், காவல் நிலையம் அருகிலேயே 7 கடைகளில் தற்போது திருட்டு நடந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x