

மக்களின் ஆதரவைப் பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இது குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னையில் மிகச் சிறப்பாக நடை பெற்ற தமாகாவின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக என்னை ஒருமனதாக தேர்ந்தெடுத்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமாகா வெற்றிக் கட்சியாக மாற, கட்சிப் பணியையும், மக்கள் பணியையும் இரு கண்களாக நினைத்து தொண்டாற்ற வேண்டும்.
மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற லட்சியத்தை அடைய தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை முழுமையாகப் பெற வேண்டும்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குக்கிராமங்கள் வரை எடுத்துச்சென்று மக்கள் ஆதரவைப் பெற தொண்டர்கள் உழைக்க வேண்டும் என வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.