

இடம்: திருவல்லிக்கேணி; படம்: எல்.சீனிவாசன்
சென்னை: தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், நீரில் மூழ்கி சேதமடைந்த விளைநிலத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: “கனமழையால் தமிழகம் முழுவதும் 85,521.76 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கி சேதமடைந்த விளைநிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும். பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்புக்கு பின்னர் உரிய நிவாரணம் வழங்கப்படும்.
நிவாரணத்தை உடனடியாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். 582 கால்நடைகள் இறந்துள்ளன. 1,601 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. மயிலாடுதுறை மற்றும் விழுப்புரத்தில் இருவர் மின்சாரம் தாக்கி இறந்தனர். தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் சுவர் இடிந்து விழுந்து இருவர் இறந்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் வானிலை ஆய்வு மைய கணிப்புக்குள் இந்த மழை வரவில்லை. சென்னையில் தோராயமாக 15 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் சாலைகளில் விழுந்த 27 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னைக்கு மட்டும் 330 பேர் கொண்ட 11 மீட்பு படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.