

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025 ஜன.1-ஐ தகுதி கொண்டு நடைபெற்று வரும் வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) 2026 தொடர்பாக தமிழகத்துக்கான சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கான பார்வையாளராக மத்திய கூட்டுறவு அமைச்சக இணை செயலரான ராமன்குமாரும் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கான பர்வையாளராக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக இணைச் செயலர் குல்தீப் நாராயணனும் நியமிக்கப்பட்டனர்.
அதேபோல் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கான பார்வையாளராக இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் நீரஜ் கர்வாலும் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான பார்வையாளராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலஅமைச்சகத்தின் இணைச்செயலர் விஜய் ரெஹ்ராவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேற்கண்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எஸ்ஐஆர் பணியின் அனைத்து கட்டங்களிலும் குறிப்பாக கணக்கீட்டு கட்டம், உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம், அறிவிப்புக்கட்டம் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல்
வெளியீடு வரை மேற்கொள்ளப்படும் நடவடிக்கை களை முழுமையாக கண்காணிப்பார்கள்.
மேலும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களும் முறையாக செயல்படுவதை கண்காணிப்பதுடன் வாக்காளர் பட்டியலில் தகுதியானோர் எவரும் விடுபடாததையும், தகுதியற்றோர் எவரும் சேர்க்கப்படக் கூடாது என்பதையும் உறுதி செய்வர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
6.36 கோடி படிவங்கள் பதிவேற்றம்: எஸ்ஐஆர் பணிகள் நிலவரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட தினசரி அறிக்கையின்படி தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகிக்கும் பணி 99.91 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதாவது 6 கோடியே 40 லட்சத்து 59,971 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதேபோல், கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றும் பணி 99.27 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதாவது 6 கோடியே 36 லட்சத்து 44,038 வாக்காளர்களின் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.