Published : 15 Apr 2015 09:42 AM
Last Updated : 15 Apr 2015 09:42 AM

சென்னையில் திடீர் மழை: மீனம்பாக்கத்தில் 10 செ.மீ. பெய்தது

சென்னையில் நேற்று காலை திடீரென்று மழை பெய்து மக்களை மகிழ்வித்தது. ஏப்ரல் மாதத்தில் சுட்டெரித்துக் கொண் டிருந்த வெயிலுக்கு இடைவேளை விட்டதுபோல் நேற்று பல இடங்களில் பெய்த மழை சென்னை யின் வெப்பத்தை தணித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

நேற்று அதிகாலையில் மழை இல்லாத நிலையில் காலை 8:30 மணியளவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், ராயபுரம், காசிமேடு, தாம்பரம் என சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பகல் 12 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது.

தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பழவந்தாங்கல், கிண்டி ஆகிய இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கத்திபாரா மேம்பாலம், விமான நிலையத்துக்கு அருகில் உள்ள மேம்பாலங்களில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மழை காரணமாக இரு வாகனங்கள் விபத்தில் சிக்கின. இதனாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அடையாறு எல்.பி. சாலை, சர்தார்படேல் சாலை, கோடம்பாக்கம் ஆற்காடு சாலை, போரூர் சந்திப்பு உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பிற்பகல் 2 மணியளவில் போக்குவரத்து சீரானது.

இதனால் அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளானாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நேரத்தில் மழை பெய்தது ஆறுதலாகவே இருந்தது.

வானிலை ஆய்வு மைய தகவல்கள் படி சென்னை நுங்கம்பாக்கத்தில் 0.26 செ.மீ., மீனம்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியிருந்தது. லட்சத்தீவு பகுதியில் உள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் இம்மழை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x