Published : 06 Apr 2015 11:02 AM
Last Updated : 06 Apr 2015 11:02 AM

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 37 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 37 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, ராமேசுவரம் மீனவர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது.

நாகப்பட்டினம் அக்கரை பேட்டையைச் சேர்ந்த ராஜமாணிக்கம், கந்தசாமி, திருவளர்ச்செல்வன், கனக ராஜ், செந்தில்குமார் ஆகியோருக்குச் சொந்தமான விசைப்படகில் 37 மீனவர்கள் நெடுந்தீவு அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த மீனவர்கள் காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டு சனிக்கிழமை மாலை பருத்தி துறை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து 37 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் கைது செய்வோம் எனக் கூறிய இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், சுட்டுக் கொல்வோம் என்று மிரட்டிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் கண்டனம் தெரிவிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக நேற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x