Published : 01 Apr 2015 08:39 AM
Last Updated : 01 Apr 2015 08:39 AM

கிருஷ்ணா நீர் கேட்டு சந்திரபாபுவுக்கு ஓபிஎஸ் கடிதம்

கோடை காலத்தில் சென்னையின் குடிநீர் தேவையை சமாளிப்பதற்காக ஆந்திர அரசு 2 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி யுள்ளார்.

இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நேற்று அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கோடை வெயில் காரணமாக சென்னையில் உள்ள நீர் ஆதாரங்களின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இரு மாநிலங்களுக்கு இடையேயான நீர் பகிர்வு தொடர்பாக ஜனவரி 28-ம் தேதி நடைபெற்ற குழுவின் கூட்டத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தமிழ்நாட்டுக்கு 3 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஆந்திர அரசும் ஏற்றுக் கொண்டது. எனினும் மார்ச் 21-ம் தேதி வரை தமிழ்நாடு எல்லைப் பகுதிக்கு வெறும் 1.34 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வந்துள்ளது.

ஒப்பந்தப்படி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டும். எனினும் ஜனவரி முதல் மார்ச் 21-ம் தேதி வரை 1.74 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது.

இந்த சூழலில் இப்பிரச்சினையில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும். கண்டலேறு நீர்த் தேக்கத்திலிருந்து தமிழ்நாட்டின் ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு ஏப்ரல் மாதத்தில் குறைந்தது 2 டி.எம்.சி. அளவேனும் கிடைக்கும் வகையில் தண்ணீர் திறந்து விடுமாறு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x