Last Updated : 10 Apr, 2015 08:35 AM

 

Published : 10 Apr 2015 08:35 AM
Last Updated : 10 Apr 2015 08:35 AM

சிறைகளில் வாழ்வை பறிகொடுக்கும் தமிழக இளைஞர்கள்

ஆந்திரத்தில் 20 உயிர்களை பலிவாங்கிய கொடூரமான என்கவுன்ட்டரின் பின்னணியில் 2 முக்கிய காரணங்கள் இருப்பதை மறுக்க முடியாது.

கடந்த 2003-ல் திருப்பதி மலைப் பாதையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், சிறிய காயங்களுடன் அவர் தப்பினார். மாநில முதல்வரை அவரது மாவட்டத்திலேயே தாக்கும் துணிச்சல் நக்சலைட்களுக்கு மட்டுமே உண்டு என்றது போலீ்ஸ் தரப்பு. ராயலசீமாவின் அடர்ந்த வனப்பகுதிகள் அவர்களது செயல்பாடுகளுக்கு வசதியாக இருந்தது.

அப்போது, கோடிகளில் புரண்ட மரக் கடத்தல்காரர்களுடன் நக்சல்களுக்கு ஏற்பட்ட தொடர்பில், பொது எதிரியான சந்திரபாபு நாயுடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. தவிரவும், ஆந்திரத்தில் செல்வாக்குடன் திகழும் ரெட்டி கம்மா ஆதிக்க சாதியினர் இடையிலான தொழில் போட்டி தொடர்பான மோதலாகவும் அது பார்க்கப்பட்டது (சந்திரபாபு நாயுடு, கம்மா சமுதாயத்தை சேர்ந்தவர்). ராயலசீமா பகுதியில் சந்திரபாபுவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், மரக்கடத்தல் மாபியாவை முடக்குவதற்காகவே இந்த என்கவுன்ட்டர் என்று நம்பப்படுகிறது.

செம்மரக் கடத்தல் உயிர் பலி தொடர்பாக தேசிய பழங்குடியினர் மனித உரிமை ஆணையத்தின் உண்மை அறியும் குழுவினர் 2014-ல் வெளி யிட்ட ஆய்வறிக்கை அதை உறுதிப்படுத் துகிறது. ‘‘ஆந்திரத்தில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ரெட்டி, கம்மா சமூகத்தை சேர்ந்த சில பெரும்புள்ளிகள்தான் மரக்கடத்தல் பின்னணியில் உள்ளனர்’’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.

கடந்த 2013 டிசம்பரில் மரக்கடத்தல்காரர்களால் 2 ஆந்திர வன அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மரக்கடத்தல்காரர்களை ஒழிக்க வனத் துறையினரும், அதிரடிப் படையினரும் உறுதிபூண்டதற்கு இது 2-வது காரணம். அதைத் தொடர்ந்து, 600 பேரை கைது செய்து சிறையில் தள்ளினர். கடந்த மே மாதத்தில் இருந்து இதுவரை 28 பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர்.

சென்னைக்கு 160 கி.மீ. தொலைவில் நடைபெறும் இச்சம்பவங்களை தடுக்க முடியாமலோ, போதிய தீவிரம் காட்டாமலோ தமிழக அரசு இருந்ததுகூட நிலைமை இவ்வளவு மோசமானதற்கு காரணமாக கூறப்படுகிறது. தமிழக தொழிலாளர்கள் ஆந்திர வனப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கக் கோரி ஆந்திர போலீஸார் இதுவரை 3 முறை கடிதம் எழுதியுள்ளனர். அப்போதெல்லாம் எல்லைப் பகுதிகளில் ஒருசில நாட்களுக்கு சோதனையை தீவிரப்படுத்திவிட்டு, பிறகு, மெத்தனமாகிவிடுவதை அதிகாரிகள் வழக்கமாக வைத்திருந்தனர்.

மரக்கடத்தலில் ஈடுபடுவது சட்ட விரோதமானது, உயிருக்கு ஆபத்தானது என்று எல்லைப் பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அப்பகுதிகளில் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, இளைஞர்கள் மாற்றுத் தொழிலில் ஈடுபட நிதியுதவியுடன் கூடிய பயிற்சி அளிப்பது என்பது போன்ற ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளை தமிழக அரசு இனியாவது மேற்கொள்வதே இப்பிரச் சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும். வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு, கண்காணிப்பை தீவிரப்படுத்துவதும் பயனளிக்கும். ஆந்திர சிறைகளில் வாடும் சுமார் 5 ஆயிரம் தமிழக இளைஞர்களை விடுவிக்கவும் தமிழக அரசு தீவிர முயற்சி எடுக்கவேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x