

திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா மீது பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவின்பேரில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று ஆசிக் மீராவுக்கு மரபணு பரிசோதனை நடைபெற்றது.
திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதி அதிமுக உறுப்பினராகவும் தமிழக அமைச்சராகவும் இருந்த போது சாலை விபத்தில் மரண மடைந்த மரியம்பிச்சையின் மகன் ஆசிக் மீரா. விபத்தில் மரியம் பிச்சை இறந்ததையடுத்து ஆசிக் மீராவுக்கு கட்சி மேலிடம் திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவியை கடந்த 2011-ம் ஆண்டு வழங்கியது. இவர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த துர்கேஸ்வரியை(29) திரு மணம் செய்துகொள்வதாகக் கூறி கர்ப்பிணியாக்கிவிட்டு, பிறகு திருமணம் செய்யாமல் புறக்கணித் தாராம்.
இதையடுத்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆசிக் மீரா மீது, துர்கேஸ் வரி பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார். நீண்ட அலைக்கழிப்புக்குப் பிறகு கடந்த ஜூன் 26-ம் தேதி போலீஸார் ஆசிக் மீரா மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந் நிலையில் துர்கேஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஆசிக் மீரா மீதான வழக்கு திருச்சி குற்றவியல் நடுவர் எண் 5-ல் நடைபெற்று வந்தது. இந்த நீதிமன்றத்தில் ஆஜரான துர்கேஸ் வரி, தனது குழந்தைக்கு ஆசிக் மீராதான் தந்தை என்பதை நிரூ பிக்க அவருக்கும் எனக்கும் மரபணு சோதனை நடத்த வேண் டும் என கேட்டார். ஆசிக் மீரா இதற்கு உடன்பட மறுத்தார்.
நேற்று திருச்சி நீதி மன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அவரை திருச்சி அரசு மருத் துவக் கல்லூரியில் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.
பிறகு, போலீஸார் ஆசிக் மீரா, துர்கேஸ்வரி, அவரது குழந்தை ஆகியோரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினர்.