Published : 19 Apr 2015 12:57 PM
Last Updated : 19 Apr 2015 12:57 PM
நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த மாணிக்கவேல்(45) என்பவரின் பைபர் படகில் அவருடன் மேலும் 6 மீனவர்கள் நேற்று முன்தினம் நாகையிலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கில் மீன்பிடித்துவிட்டு, இரவு 8.30 மணியளவில் கரை திரும்ப முயன்ற இவர்கள் மீது, வேகமாக படகில் வந்த இலங்கை மீனவர்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்கியுள்ளனர்.
பின்னர், அந்தப்படகில் இருந்து நாகை மீனவர்கள் சென்ற படகில் குதித்த 3 இலங்கை மீனவர்கள் தாங்கள் வைத்திருந்த கட்டைகளால் நாகை மீனவர்களை கடுமையாக தாக்கினராம்.
இதில், மீனவர்கள் மாணிக்கவேல், தேவேந்திரன்(38) இருவருக்கும் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், நடராஜன், தங்கராசு, ராஜேஷ், மணி, குழந்தைவேலு ஆகிய 5 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. நாகை மீனவர்களைத் தாக்கியதோடு, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் அள்ளிக்கொண்டு, எச்சரித்துவிட்டு இலங்கை மீனவர்கள் சென்றனராம்.
காயமடைந்த நிலையில் நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீன்வளத் துறை மற்றும் க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT