

ஆந்திர மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக கட்சி சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளதாக, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும், ஆந்திர காவல் துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதுதானா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ''ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு மற்றும் ஈசகுண்டா பகுதியில் உள்ள சேஷாசல வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் 7.4.2015 அன்று நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சேலம், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சார்ந்த 20 பேர் உயிரிழந்தனர் என்பதை அறிந்து நான் மிகுந்த மன வேதனையும், துயரமும் அடைந்துள்ளேன்.
தற்போது ஊடகங்கள், பொது நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, ஆந்திர காவல் துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதுதானா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
இறந்த தொழிலாளர்கள் சட்டத்திற்கு விரோதமாக செம்மரக் கடத்தலில் ஈடுபட்டிருந்திருப்பார்கள் என்று கருதினாலும், செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் தேவையான அளவுக்கு மட்டுமே பலப்பிரயோகம் செய்தார்களா என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது.
ஆந்திர அரசு உண்மை நிலையை அறிவதற்குத் தேவையான விசாரணையை நடத்திட வேண்டுமென்றும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆந்திர முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும், அதிமுக சார்பாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.