ஆந்திர பஸ்கள் மீண்டும் இயக்கம்

ஆந்திர பஸ்கள் மீண்டும் இயக்கம்
Updated on
1 min read

தமிழகம் - ஆந்திரா இடையே கடந்த 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆந்திர பஸ்கள் நேற்று மீண்டும் இயங்கத் தொடங்கின.

திருப்பதி அருகே 20 தமிழர்கள் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழகம் - ஆந்திரா இடையே ஓடிக்கொண்டிருந்த ஆந்திர பஸ்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. நேற்று முதல் அவை மீண்டும் இயங்கத் தொடங்கின.

இது தொடர்பாக ஆந்திர அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, “தமிழக – ஆந்திரா எல்லையோரம் நடந்த போராட்டங்களால் பயணிகளின் பாதுகாப்பு கருதி பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. நிலைமை ஓரளவுக்கு சீராகியுள்ளதால் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து திருப்பதி, நெல்லூர், கடப்பா, காளஹஸ்தி உள்ளிட்ட இடங்களுக்கு நேற்று பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும், ஐதாராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நீண்ட தூர பேருந்துகள் வராத காரணத்தால் அவை இயக்கப்படவில்லை. அந்த பேருந்துகள் வந்தவுடன் பேருந்துகள் முழுமை யாக இயக்கப்படும்” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in