ஜாகீர் உசேனிடம் நீதிமன்றத்தில் கையெழுத்து சோதனை

ஜாகீர் உசேனிடம் நீதிமன்றத்தில் கையெழுத்து சோதனை
Updated on
1 min read

சென்னையில் உளவு வேலையில் ஈடுபட்டதாக இலங்கையை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் ஏப்ரல் 29-ம் தேதி திருவல்லிக்கேணியில் கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்ததாக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், ஷா ஆகியோர் மீதும் தமிழக க்யூ பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜாகீர் உசேன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி என்றும் பரவலாக கூறப்படுகிறது.

புழல் சிறையில் நீதிமன்ற காவலில் ஜாகீர் உசேன் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை எழும்பூர் நீதி மன்றம் அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட் டார். அவரது காவலை வருகிற 10-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாகீர் உசேனிடம் கையெழுத்து சோதனை நடத்தப்பட்டது. அவரிடம் சுமார் 20 கையெழுத்துகள் பெறப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும், ஜாகீர் உசேன் குறித்த தகவல்களை 14 பக்கங்களில் அவரே கைப்பட எழுதி ஒவ்வொரு பக்கத்திலும் ஜாகீர் உசேன் என கையெழுத்திட்டு வைத்திருந்த பேப்பர்களையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

ஜாகீர் உசேனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒரு நபருக்கும் தீவிரவாத செயல்களில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. அவர் குறித்த தகவல்களையும் க்யூ பிரிவு போலீஸார் சேகரித்துள்ளனர். அந்த நபரை பிடிக்க வேறொரு நாட்டின் உதவியை க்யூ பிரிவு போலீஸார் எதிர்பார்த்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in