Published : 18 May 2014 12:29 PM
Last Updated : 18 May 2014 12:29 PM

கருணாநிதியின் கட்டுப்பாட்டில் கட்சியை ஒப்படைக்க வேண்டும்: மு.க.அழகிரி பேட்டி

திமுக தலைவர் கருணாநிதியின் கட்டுப்பாட்டுக்குள் கட்சியை கொண்டுவர வேண்டும் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, உள்கட்சித் தேர்தலிலும் மக்களவைத் தேர்தல் வேட்பாளர் தேர்விலும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதனால் திமுக படுதோல்வியை சந்திக்கும் என்றும் கூறி வந்தார். அவர் கூறியபடியே, போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது.

இந்நிலையில் ‘தி இந்து’வுக்கு மு.க.அழகிரி சனிக்கிழமை அளித்த பேட்டி:

நீங்கள் குற்றம்சாட்டியதுபோல் நடந்துவிட்டது. அடுத்து என்ன நடவடிக்கை எடுத்தால், மீண்டும் திமுகவை வலுவான கட்சியாக்க முடியும்?

அதை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நான்தான் கட்சியில் இல்லை என்று சொல்லி விட்டார்களே. தலைவரிடம் கேளுங்கள் அல்லது சின்னத் தலைவராக செயல்படும் ஸ்டாலினிடம் கேளுங்கள். அறிவாலயத்தில் யாராவது ஒளிந்து கொண்டிருப்பார்கள். அவரைப் போய்க் கேளுங்கள். என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

தலைவரைச் சந்தித்துப் பேசுவீர்களா?

இப்போதும் சொல்கிறேன், அவர்தான் எனக்குத் தலைவர். அவர் என்னை வீட்டுக்கு வருமாறு அழைத்தால், நிச்சய மாக நேரில் சந்தித்துப் பேசுவேன். அவர் அழைக்காவிட்டால் செல்ல மாட்டேன்.

திமுக அலுவலகமான அறிவாலயத்துக்கு தொண்டர்கள் போன் செய்து, கட்சி நிர்வாகத்தை மாற்றுமாறு கேட்கிறார்களாமே?

உண்மைதான். கட்சியின் நிர்வாகம் தலைவர் கையில் இல்லை. சின்னத் தலைவராக ஸ்டாலின் செயல்படுகிறார். கட்சியைத் தலைவர் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்.

உங்கள் ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட முடிவை எடுப்பீர்களா?

இப்போது அதற்கான ஐடியா இல்லை.

இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x