Published : 27 Apr 2015 08:38 AM
Last Updated : 27 Apr 2015 08:38 AM

வருமான வரி அதிகாரிகளாக நடித்து 52 பவுன் பறிப்பு

சேலம் அருகே வருமான வரித்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் போல் நடித்து கார் ஓட்டுநர் வீட்டில் 52 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் சம்பத். இவரது மனைவி சாந்தி. இவர் களது மகன்கள் இருவரும் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். இதனால், இவர்கள் இருவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் இவர்களது வீட்டுக்கு 4 பேர் வந்தனர். அவர்கள் தங்களை வருமான வரித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் எனக் கூறிய அவர்கள், யாருக்கும் போன் பண்ணக் கூடாது எனவும் எச்சரித்தனர். இரண்டு மணி நேரம் சோதனையிட்ட அவர்கள் வீட்டில் இருந்த 52 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை எடுத்துக் கொண்டு, விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும் எனக் கூறி அங்கிருந்து சென்றனர்.

அவர்கள் சென்ற பின்னர் தம்பதியர் அக்கம் பக்கத்தினரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கூறினர். அப்போதுதான் வந்தவர்கள் போலி அதிகாரிகள் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து மேச்சேரி போலீஸில் புகார் செய்தனர். எஸ்.பி சுப்புலட்சுமி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x