Last Updated : 21 Apr, 2015 08:34 AM

 

Published : 21 Apr 2015 08:34 AM
Last Updated : 21 Apr 2015 08:34 AM

ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்பக் கேட்டு கோக-கோலா நிறுவனத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கோக-கோலா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக அந்நிறுவனத்துக்கு தமிழக அரசு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில், கோக-கோலா நிறுவனத் துக்கு தமிழக அரசு இடம் ஒதுக்கியிருந்தது. பெருந்துறை தொழில் வளர்ச்சி மையத்தில் சுமார் 71.3 ஏக்கர் நிலம் அந்நிறுவனத்துக்காக ஒதுக்கப்பட் டுள்ளது. அங்கு ரூ.500 கோடி செலவில் குளிர்பானங்கள், பழச்சாறுகள், குடிநீர் போன்றவற்றைத் தயாரிக்கும் ஆலையை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த இடத்தில் தொழிற்சாலை அமைத்தால் ஏராளமான நிலத்தடி நீரை அந்நிறுவனம் உறிஞ்சும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். அது மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும், சில கட்சிகளும், கோக-கோலா நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

ஆனால், அதற்கு கடந்த மார்ச் மாதத்தில் விளக்கம் அளித்த அந்நிறுவனத்தினர், தாங்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தப்போவதில்லை என்றும், பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரித்தபிறகே வெளியேற் றுவோம் எனவும் உறுதியளித்தனர்.

மேலும், அந்த ஆலைக்குத் தேவையான தண்ணீரை தமிழக தொழில்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தங்களுக்கு நிலத்தை ஒதுக்கிய சிப்காட் நிறுவனத்தின் மூலமாகப் பெற்றுக் கொள்வோம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, பெருந்துறை யில் கோக-கோலா நிறுவனத்துக்கு இடம் அளிக்கப்பட்டது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையிலும் சமீபத் தில் பிரச்சினை எதிரொலித்தது.

இந்நிலையில், கோக-கோலா நிறுவனத்துக்கு சிப்காட் சார்பில் நேற்று ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அது குறித்து தொழில்துறை அதிகாரிகள் கூறும்போது, “தங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டும் இதுவரை பணிகளைத் தொடங்கவில்லை. அதனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்தை ஏன் நாங்கள் திரும்பப் பெறக்கூடாது?” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x