Published : 24 Apr 2015 10:25 AM
Last Updated : 24 Apr 2015 10:25 AM

மெட்ரோ ரயில் பாதுகாப்பு அம்சங்கள்: அசோக்நகர் ஆலந்தூர் இடையே 2 வாரங்களில் ஆய்வு தொடங்கும்

அசோக்நகர் ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து 2 வாரங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் பணிகள் முடிவடைந்துள்ள கோயம்பேடு - ஆலந்தூர் இடையே, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன.

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு வட்டம்) மிட்டல் தலைமையிலான குழுவினர் ஏற்கெனவே முதல்கட்ட ஆய்வை முடித்துள்ளனர். 2-வது கட்டமாக கடந்த 20, 21 ஆகிய தேதிகளில் கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை உள்ள ரயில் நிலையங்கள், சிக்னல்கள், ரயில் பாதைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தினர்.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இதுவரை நடந்துள்ள ஆய்வுகளில் பாதுகாப்பு ஆணையரக அதிகாரிகளுக்கு முழு அளவில் திருப்தி ஏற்பட்டிருப்பதாக நம்புகிறோம். கோயம்பேடு - அசோக்நகர் இடையே நடத்தப்பட்ட 2-வது கட்ட ஆய்வு தொடர்பாக 20 கேள்விகளை கேட்டிருந்தனர்.

அதற்கு எழுத்துபூர்வமாக விளக்கம் அளித்துள்ளோம். அசோக்நகர் - ஆலந்தூர் இடையே அடுத்த 2 வாரங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. கோயம்பேடு ஆலந்தூர் வரையில் ஆரம்பத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்க உள்ளோம். பின்னர், தேவையை கருத்தில்கொண்டு அடிக்கடி ரயில்களை இயக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x