Published : 07 Apr 2015 09:11 AM
Last Updated : 07 Apr 2015 09:11 AM
கொம்பன் திரைப்படத்துக்கு எதிரான மனு மீதான விசார ணையை வரும் 15-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நடிகர் கார்த்தி நடித்த கொம்பன் படத்துக்கு தடை விதிக்கக்கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கே.கிருஷ்ணசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, கொம்பன் படத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், தடை கோரிய மனுக்களை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
மேலும் படத்தை பார்த்த பிறகு அதில் ஆட்சேபகரமான வசனங்கள், காட்சிகள் இருந்தால் நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் மனுவில் கேட்கப்பட்டுள்ள கோரிக்கையை திருத்தம் செய்து மனுவை தொடரவும் அனுமதி வழங்கினர். பின்னர் அதுகுறித்த விசாரணையை ஏப். 6-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணசாமி தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட திருத்தம் செய்ய அவகாசம் தரும்படி கேட்டுக்கொண்டனர். இதை ஏற்று விசாரணையை வரும்15-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT