Last Updated : 02 Apr, 2015 10:04 AM

 

Published : 02 Apr 2015 10:04 AM
Last Updated : 02 Apr 2015 10:04 AM

காவிரி நீருடன் சேர்த்து கழிவுநீரையும் தமிழகத்துக்கு அனுப்பும் கர்நாடகம்: அரசு அதிகாரிகள் அதிர்ச்சி

பெங்களூருவில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், காவிரி மற்றும் இதர சிற்றாறுகள் வழியாக தமிழகத்துக்கு அனுப்பப்படும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக கர்நாடகமும், தமிழகமும் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் போராடி வருகின்றன. தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், காவிரிக்கு குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியை கண்டித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுசேர்ந்து, பிரதமர் மோடியைச் சந்தித்து இதுதொடர்பாக புகார் மனுவினை அளித்தனர். தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற் றது. இத்தகைய கொந்தளிப்பான சூழலில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் வீடுகள், அலுவலகங் களில் இருந்து தினமும் வெளியாகும் 1,400 மில்லியன் லிட்டர் கழிவுநீர், கால்வாய்கள் வழியாகக் கொண்டுசெல்லப்பட்டு, காவிரி மற்றும் சிற்றாறுகள் வழியாக, தமிழகத்தை அடைவது தெரியவந்துள்ளது.

அதாவது பெங்களூருவில் தினசரி பயன்படுத்தப்படும் 1,950 மில்லியன் லிட்டர் நீரில், சுமார் 60 சதவீதம் (889 மில்லியன் லிட்டர்) கழிவுநீர், பினாகினி மற்றும் தென்பெண்ணை ஆறுகள் வழியாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களை அடைகிறது. மீதமுள்ள 40 சதவீதம் கழிவுநீரானது, அர்காவதி மற்றும் காவிரி கிளைநதிகள் மூலமாக தமிழகத்தை அடைகிறது. இதில் 5 சதவீதம் ஆவியாகி விட்டாலும், மீதமுள்ள கழிவுநீர், அதாவது பெங்களூரில் இருந்து 1,482 மில்லியன் லிட்டர் கழிவுநீர் தமிழகத்தை வந்தடைவது தெரிய வந்துள்ளது.

இத்தகவலை கர்நாடக அரசே அம் மாநிலத்தின் மேலவையில் நேற்று முன்தினம் தெரிவித்துள்ள தகவல் பொதுப்பணித்துறைக்குத் தெரியவந்துள் ளது. பெங்களூருவில் இருந்து தினசரி வெளியேற்றப்படும் கழிவுநீரைத் தமிழகத் துக்கு அனுப்பாமல், அதை சுத்திகரித்து, அருகில் உள்ள கோலார் மற்றும் சிக்கபல்லாப் பூர் மாவட்டங்களில் உள்ள 134 ஏரிகளை நிரப்பி, நீர்வளத்தையும், நிலவளத்தையும் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கர்நாடக மேலவையில் மாநில சிறுபாசனத்துறை அமைச்சர் ஷிவராஜ் தங்கடகி தெரிவித்துள் ளார்.

இதை அறிந்த தமிழக அரசு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகத்தில் இருந்து வரும் ஆறுகள் பெரும்பாலும் பாசனத்துக்கே பயன்படுத்தப்படுகின்றன. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பெரிய அளவில் குடிநீர் விநியோ கம் தொடங்கியுள்ளது.

“தொழிற்சாலைகளில் இருந்து வெளியே றும் நச்சுத்தன்மைமிக்க கழிவுகள் இதில் அடங்கியிருப்பதால் மனிதர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்” என்றும் கர்நாடக அமைச்சரே கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, ‘‘இது தவறான நடவடிக்கை. தென்பெண்ணை ஆறு போன்ற கிளை நதிகளில் வரும் நீர், கிருஷ்ணகிரியில் உள்ள கெலவரப்பள்ளி, சாத்தனூர் போன்ற அணைகளில் தேக்கப்பட்டு விவசாயத் துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்” என்றார்.

பெயர் வெளியிட விரும்பாத பொதுப் பணித்துறை (நீர்வளம்) உயரதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘கர்நாடக அரசு, பெங்களூருவில் இருந்து வெளி யேறும் கழிவுநீரை தமிழகத்துக்கு காவிரி மற்றும் இதர கிளை நதிகள் மூலமாக வெளியேற்றிவரும் தகவல், பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது சட்டவிரோதமான செயல். இதனை மீண்டும் உறுதிப்படுத்திய பிறகு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது பற்றி அரசுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x