Published : 03 Apr 2015 10:25 AM
Last Updated : 03 Apr 2015 10:25 AM
உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 3 மாதங்களுக்கு நீதிபதிகள் விசாரிக்கும் மனுக்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணிபுரியும் நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாறுதல் செய்யப்படுவது வழக்கம். தற்போது பணிபுரிந்த நீதிபதிகளின் 3 மாத பணிக் காலம் ஏப். 1-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து இங்கு பணிபுரிந்த நீதிபதிகளில் பலர் சென்னைக்கும், அவர்களுக்குப் பதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள் மதுரை கிளைக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், பி.ஆர்.சிவக்குமார், எஸ்.நாகமுத்து, கே.கே.சசிதரன், எம்.எம்.சுந்தரேஷ், கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் மதுரை கிளைக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
ஏப். 6-ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் முதல் அமர்வில் பொதுநல மனு, ரிட் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி ஆகியோர் 2-வது அமர்வில் ஆள்கொணர்வு மனு, குற்றவியல் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் இரண்டாவது மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதி எஸ்.நாகமுத்து குற்றவியல் மேல்முறையீடு, சிபிஐ, ஊழல் தடுப்பு மனுக்களையும் விசாரிப்பர்.
நீதிபதி கே.கே.சசிதரன், சீராய்வு (இறுதி விசாரணை, 2-வது மேல்முறையீடு) மனுக்களையும், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களையும், நீதிபதி கே.கல்யாணசுந்தரம், ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களையும், நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோர் ரிட் மனுக்களையும், நீதிபதி வி.எம்.வேலுமணி வாகன விபத்து இழப்பீடு மனுக்களையும் விசாரிப்பர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT