ஆந்திராவில் பலியான 20 தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: திமுக அறிவிப்பு

ஆந்திராவில் பலியான 20 தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: திமுக அறிவிப்பு
Updated on
1 min read

ஆந்திராவில் பலியான 20 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கட்சி சார்பில் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், "திருப்பதி அருகே ஆந்திர மாநிலக் காவல் துறை துப்பாக்கியால் சுட்டதால் 20 தமிழர்கள் பலியான செய்தி அறிந்ததும், நான் கண்டன அறிக்கை வெளியிட்டதோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு மாநில அரசுகளின் சார்பில் உடனடியாக உதவித் தொகை வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்தேன்.

அதற்குப் பிறகுதான் தமிழக அரசின் சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 லட்ச ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்குவதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

அரசின் சார்பில் வழங்கப்பட்ட தொகை மிகக் குறைவாக இருப்பதால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இறந்தவர்களின்

குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வீதம், இருபது குடும்பங்களுக்கும் மொத்தம் 20 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தொகையினை கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களும், முன்னணியினரும் நேரடியாகச் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிடுவார்கள்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in