Last Updated : 15 Apr, 2015 09:04 PM

 

Published : 15 Apr 2015 09:04 PM
Last Updated : 15 Apr 2015 09:04 PM

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூரில் காட்சிப் பொருளானது அம்மா உணவகம்: பல லட்சம் ரூபாய் வீண்

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் நகராட்சி பகுதிகளில் பல லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட ‘அம்மா உணவகம்’ பொது மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ளன. இதனால் ஏழை, எளிய மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

விலைவாசி உயர்வின் தாக்கத்தில் இருந்து ஏழை, எளிய மக்களை விடுவிக்க தமிழக அரசு சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 இடங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது.

ஒரு ரூபாய்க்கு 100 கிராம் எடையளவு இட்லி, 5 ரூபாய்க்கு 350 கிராம் தயிர் சாதம் அல்லது சாம்பார் சாதம் விற்பனை செய்யப்பட்டதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

இதையடுத்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளிலும், அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 9 மாநகராட்சிகளிலும் அம்மா உணவகம் படிப்படியாக திறக்கப்பட்டன.

இந்நிலையில், மாநகராட்சியை தொடர்ந்து நகராட்சி பகுதிகளிலும் அம்மா உணவகம் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் ரூ.25 லட்சம் செலவில் அம்மா உணவகம் அமைக்க அந்தந்த நகராட்சி அவசர கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு அம்மா உணவகம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் மந்தமாக நடந்த பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. பல லட்சம் செலவில் கட்டிடம் கட்டி, சமையலுக்கு தேவையான பாத்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டன.

4 மாதங்களை கடந்தும் அம்மா உணவங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன. இதனால் ஏழை,எளிய மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

அதேபோல், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அம்மா உணவகம் திறப்பு விழா காணாமல் இருப்பது சுய உதவிக்குழு பெண்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்த போது, ‘‘அனைத்து பணியும் நிறைவு பெற்றுவிட்டது. அரசு உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அதன்பிறகு அம்மா உணவகம் திறக்க ஏற்பாடு செய்யப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x