

பிரதிநிதித்துவப் படம்
சென்னை: ‘தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும்போது 38 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்று மத்திய இணை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிபு: ‘நாடாளுமன்றத்தில் இன்று நான் எழுப்பிய வினாவுக்கு அமைச்சர் அத்வாலே பதிலளித்துள்ளார்.
> கடந்த ஐந்து ஆண்டுகளில் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் செப்டிக் டேங்குகளைச் சுத்தம் செய்யும்போது நிகழ்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மாநில வாரியாகத் தருக.
> ஆபத்தான முறையில் மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்திய முகமைகள் அல்லது அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் அந்தப் புகார்கள் மீதான தீர்வு நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தருக.
> மாநிலங்கள் முழுவதும் இயந்திரமயமாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் முறையின் செயல்பாட்டை அரசு மதிப்பீடு செய்துள்ளதா, ஆம் எனில், அது குறித்த விவரங்களைத் தருக.
> மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளும் முறையை முழுமையாக ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
- இந்தக் கேள்விகளை நான் எழுப்பினேன்.
அதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்த பதிலின் விவரம்:
> “தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தகவலின்படி, 01.01.2021 முதல் 30.06.2026 வரையிலான காலத்தில் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் செப்டிக் டேங்குகளை ஆபத்தான முறையில் சுத்தம் செய்தபோது உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் மாநில வாரியான விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
> கடந்த ஐந்து ஆண்டுகளில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களில் 193 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
> மாநிலங்கள் முழுவதும் இயந்திரமயமாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் முறையின் செயல்பாட்டை அரசு மதிப்பீடு செய்யவில்லை.
> மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வுச் சட்டம், 2013 (MS Act, 2013)-ன் விதிகளின்படி, 6.12.2013 முதல் நாட்டில் மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளும் முறை தடை செய்யப்பட்ட நடவடிக்கையாகும்.
மேற்கூறிய தேதிக்குப் பிறகு, எந்தவொரு நபரோ அல்லது முகமையோ மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளும் பணியில் யாரையும் ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது.
MS Act, 2013-ன் விதிகளை மீறி மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளும் பணியில் யாரையாவது ஈடுபடுத்தும் நபர் அல்லது முகமை, அச்சட்டத்தின் பிரிவு 8-ன் கீழ் தண்டனைக்குரியவர் ஆவர்; இதற்காக 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம். அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளும் முறை நடைமுறையில் இருப்பது குறித்த எந்தத் தகவலும் பெறப்படவில்லை” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும்போது உயிரிழந்தவர்களின் மாநில வாரியான தகவல்களைப் பார்க்கும்போது, தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 332 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 58 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக ஹரியானாவில் 47 பேர், மூன்றாவதாக தமிழ்நாட்டில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். செப்டிக் டேங்குகளைச சுத்தம் செய்யும்போது உயிரிழக்கும் கொடுமையை இல்லாமல் ஒழிப்பதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.