Published : 20 Apr 2015 01:20 PM
Last Updated : 20 Apr 2015 01:20 PM

சீதாராம் யெச்சூரியின் முதல் உரைக்கு கருணாநிதி பாராட்டு

"நம்முன் உள்ள முக்கிய பணி, இடதுசாரிகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைப்பது தான்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சீதாராம் யெச்சூரியின் முதல் உரைக்கு திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் சீதாராம் யெச்சூரி அனைவரும் எதிர்பார்த்தபடி, தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்காக என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2010ஆம் ஆண்டு, கழக ஆட்சியில் கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்ற போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கலந்து கொண்டவர் நண்பர் சீதாராம் யெச்சூரி. செம்மொழி மாநாட்டில் அவர் ஆற்றிய உரை சிறப்பாகவும், ஆக்கப் பூர்வமானதாகவும் இருந்தது.

அவர் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தற்போது தேர்வு பெற்றதும் ஆற்றிய முதல் உரையிலேயே "நம்முன் உள்ள முக்கிய பணி, இடதுசாரிகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைப்பது தான்" என்று தெரிவித்துள்ள கருத்தைத்தான் இந்து நாளிதழ் இன்று அருமையாக எழுதியுள்ள தலையங்கத்தில் "Mr. Yechury believes in greater cooperation and coordination with other secular-democratic parties and in building a more broad-based front to deal with changing ground realities and the growing threats to secularism" என்று குறிப்பிட்டுள்ளது.

அரசியலில் சாதாரணத் தொண்டராக இருந்து, தன்னுடைய ஆர்வம் மிக்க உழைப்பாலும், அறிவாற்றலாலும் படிப்படியாக அரசியலில் முன்னேற்றம் கண்ட அருமை நண்பர் யெச்சூரி அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஆகியிருப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x