Published : 16 Apr 2015 10:06 AM
Last Updated : 16 Apr 2015 10:06 AM

எண்ணூர் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை: பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்

எண்ணூர் காமராஜர் துறை முகத்தில் தொடங்கப்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பால், கப்பல்களில் ஏற்படும் எண்ணெய் கசிவை துல்லியமாக கண்டு பிடிக்க முடியும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை யமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எண்ணூர் துறைமுகத்தில் ரூ.14 கோடியே 10 லட்சம் செலவில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் சேவையை பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கிவைத்து பேசியதாவது:

இந்தியாவில் இயங்கும் 12 பெரிய துறைமுகங்களில் கம்பெனி சட்டத்தின் கீழ் இயங்கும் துறைமுகமாக காமராஜர் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் ஆண்டுக்கு 3 கோடி டன் சரக்குகளை கையாள முடியும். 2013-14-ல் 2 கோடியே 70 லட்சம் டன் சரக்குகளை கையாண்ட இந்த துறைமுகம், 2014-15 நிதியாண்டில் 3 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இந்த துறைமுகத்தில் கப்பல் வந்து செல்லும் வழித்தடங்களின் எண்ணிக்கை 6-லிருந்து 8 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதனால் மேலும் அதிக சரக்குகளை கையாள முடியும். அடுத்த 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு 5 கோடி டன் சரக்குகளை கையாளும் அளவுக்கு இத்துறைமுகம் உயரும். அதற்கேற்றவாறு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். இதுவரை நிலக்கரியை மட்டும் கையாண்டு வந்த இந்த துறைமுகம் மூலம் தற்போது கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இத்துறைமுகத்தை மேம்படுத் தும் வகையில் நாட்டிலேயே முதல்முறையாக அதிநவீன தொழில்நுட்பத்திலான கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை நிறுவியுள்ளோம். இதன்மூலம் துறைமுகம் மற்றும் அதன் அருகில் உள்ள கடலோரங் களில் கப்பல்களின் இயக்கத்தை கண்காணிக்க முடியும். கப்பல் களை கப்பல் தளத்தில் நிறுத்து வதற்கும், ஆழமற்ற பகுதியில் கப்பல் செல்வதை தடுப்பதற்கும் இது உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் எம்.ஏ.பாஸ்க ராச்சார், பொது மேலாளர் ஏ.கே.குப்தா, இயக்குநர் (செயலாக்கம்) சஞ்சய் குமார், சென்னை துறைமுகத் தலைவர் அதுல்ய மிஷ்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழக தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஆந்திர அரசு பதில் சொல்லியாக வேண்டும். சம்பந்தப்பட்ட போலீ ஸார் தண்டிக்கப்பட வேண்டும். எண்ணூர்- சென்னை துறைமுகங் களுக்கிடையிலான சாலை பணிகளில் 100 மீட்டர் தூரத்துக்கு வடிவமைப்பை மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. மதுரவாயல்- சென்னை துறைமுகம் இடையிலான சாலை பணிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x