Published : 07 Apr 2015 08:24 PM
Last Updated : 07 Apr 2015 08:24 PM
இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இத்தாலி கடற்படை வீரர், சொந்த நாட்டில் தங்கியிருக்க வழங்கப்பட்ட அனுமதியை நீட்டிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
மாசிமிலியானோ லட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீது வரும் 9-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் ஏ.ஆர்.தவே மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தெரிவித்தது.
இத்தாலியின் என்ரிகா லெக்ஸி கப்பலில் வந்த அந்நாட்டு கடற்படை வீரர்களான மாசிமிலியானோ லட்டோர், சால்வடோர் ஜிரோன் ஆகிய இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி கேரள கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்றனர். இதையடுத்து, இந்த 2 வீரர்களும் கைது செய்யப்பட்டு அது தொர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவர்களில் லட்டோர், மருத்துவ சிகிச்சைக்காக இத்தாலி செல்ல அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அவர் சொந்த நாட்டுக்கு செல்லவும் 4 மாதங்கள் தங்கியிருக்கவும் கடந்த ஆண்டு செப்டம்பரில் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், மேலும் சில மாதங்கள் இத்தாலியிலில் தங்கியிருக்க அனுமதி கோரி லட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மேலும் மூன்று மாதம் இத்தாலியில் தங்கியிருக்க அனுமதி அளித்து கடந்த ஜனவரி 14-ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.