Published : 06 Apr 2015 09:28 AM
Last Updated : 06 Apr 2015 09:28 AM

மதுவால் குடும்பமே அழிந்த பரிதாபம்: கணவன் - மனைவி அடுத்தடுத்து தற்கொலை

அபிராமபுரத்தில் மனைவி தீக்குளித்தும், கணவன் மாடியில் இருந்து குதித்தும் தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை அபிராமபுரம் வாரன் சாலையில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் வசிப்பவர் துர்க்ரு(40). கொத்தனார் வேலை செய்தார். இவரது மனைவி விஜயா(35). துர்க்ருவுக்கு குடிப் பழக்கம் இருந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இதேபோல தகராறு ஏற்படவே விழுப்புரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார் விஜயா.

குடும்பத்தினர் சமாதானப் படுத்தி மீண்டும் விஜயாவை அழைத்து வந்து அபிராமபுரத்தில் விட்டுச்சென்றனர். சில நாட்கள் ஒழுங்காக இருந்த துர்க்ரு, நேற்று பிற்பகலிலும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, விஜயாவிடம் தகராறு செய்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற துர்க்ரு, அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் நின்று கொண்டிருந்தார்.

கணவன் தொடர்ந்து மது குடித்து தகராறு செய்ததால் மன வேதனை அடைந்த விஜயா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்களும், துர்க்ருவும் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் விஜயா முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

விஜயாவின் உடலை பார்த்துகதறி அழுத துர்க்ரு, 3-வது தளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து திடீரென கீழே குதித்து விட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவரும் உயிரிழந்தார். மதுப்பழக்கம் ஒரு குடும்பத் தையே தற்கொலை செய்ய வைத்துள்ளது. கணவன், மனைவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்த அபிராமபுரம் போலீஸார் விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x