Published : 07 Apr 2015 10:19 AM
Last Updated : 07 Apr 2015 10:19 AM
பிளஸ் டூ தேர்வில் ஒரு மதிப்பெண் வினாவில் தவறாக கேட்கப்பட்ட இரு வினாக்களுக்கு விடையளித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தலா 2 மதிப்பெண்கள் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை மாவட்ட தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.சந்திரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் மார்ச் 27-ல் பிளஸ் டூ பொருளாதாரத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வினாத்தாள் முறைப்படி தயாரிக்க வில்லை. மேலும், பொருளாதாரத் தேர்வின் மாதிரி வினாத்தாளுக்கு எதிராக அமைந்திருந்தது.
வினாத்தாளில் பகுதி ஏ-யில் 50 ஒரு மதிப்பெண் வினாக் களுக்கு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும், பகுதி பி-யில் 3 மதிப்பெண் கொண்ட 15 வினாக்களில் 10 வினாக்களுக் கும், பகுதி சி 10 மதிப்பெண் வினாக்களில் 6 வினாக்களுக்கும், பகுதி டி-யில் 20 மதிப்பெண் வினாக் களில் 6-ல் 3 வினாக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும்.
புரியாத வினாக்கள்
புத்தகக் குழு தயாரித்த மாதிரி வினாத்தாளில் பகுதி சி-யில் கேட்கப்பட்டிருந்த 10 மதிப் பெண் வினா, தேர்வின்போது வழங்கப்பட்ட வினாத்தாளில் பகுதி டி-யில் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் புரியாமலும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகை யில், பதிலளிக்க முடியாதவாறும் இருந்தன. தமிழ்வழி மாணவர் களுக்கு வழங்கிய வினாத்தாளில் பகுதி ஏ-யில் கேட்கப்பட்டிருந்த 18, 20-வது வினாக்கள் தவறானவை. திறமையான மாணவர்கள் கூட இவ்விரு வினாக்களுக்கும் பதிலளிக்க முடியாது. 20 மதிப்பெண் வினாக்கள், 10 மதிப்பெண் வினாவாக இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க மாணவர் களுக்கு அதிக நேரம் பிடித்தது. இதனால் மாணவர்கள் சரியாகத் தேர்வை எழுதவில்லை.
ஏற்கெனவே, 2013-ம் ஆண்டி லும் பிளஸ் டூ தேர்வில் பல பாடங் களில் வினாத்தாள் குழப்பமாக தயாரிக்கப்பட்டிருந்தது. இதனால் மனமுடைந்து மாணவ, மாணவியர் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.
எனவே, மூத்த பொருளாதார ஆசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து பொருளாதார வினாத் தாள் முறையற்ற வகையில் தயாரித்தது குறித்து விசாரணை நடத்தவும், பொருளாதாரத் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இதில் முடிவெடுக்கும் வரை, பொருளாதாரத் தேர்வுத்தாளை மதிப்பீடு செய்யத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
நீதிபதிகள் உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக் கறிஞர் லஜபதிராய் வாதிட்டார். விசாரணைக்குப் பின், பிரிவு ஏ-யில் கேட்கப்பட்டிருந்த ஒரு மதிப்பெண் வினாவில் 18 மற்றும் 20-வது வினாக்களுக்கு தலா 1 மதிப்பெண் வீதம் விடையளித்த அனைத்து மாணவர்களுக்கும் தலா 2 மதிப்பெண் வழங்கப் படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, அவ்விரு வினாக்களுக்கு விடையளித்த அனைவருக்கும் தலா 2 மதிப்பெண் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT