Published : 16 Apr 2015 06:35 PM
Last Updated : 16 Apr 2015 06:35 PM

இந்துத்துவா, சிவசேனாவின் வன்முறையை வேடிக்கைப் பார்க்கிறது அதிமுக அரசு: கருணாநிதி குற்றச்சாட்டு

"தமிழகத்தை வன்முறைக்களமாக மாற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டுள்ள இந்துத்துவா மற்றும் சிவசேனா கட்சியினரின் வன்முறைச் செயல்களை, அதிமுக அரசு கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்து வருகிறது" என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:

கேள்வி :- பெரியார் திடலுக்குள் இந்துத்துவா மற்றும் சிவசேனா கட்சியினர் புகுந்து திராவிடர் கழகத் தோழர்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்களே?

திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தாலி அகற்றும் போராட்டம் பற்றி 3-4-2015 அன்று நான் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் போது, "தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும், அணிந்த பிறகு அதை வேண்டாம் என்று கழற்றி வைத்து விடுவதும் என்பது அவரவர் விருப்பத்தையும், நம்பிக்கையையும், தனிப்பட்ட உரிமையையும் சார்ந்தது" என்று கூறியிருந்தேன்.

தாலி விவகாரத்தில் எனது நிலைப்பாடு...

இதுபோன்றதொரு தாலி அகற்றும் நிகழ்ச்சியை திராவிடர் கழக நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்து கொண்ட போது, என்னை விட்டு அதனைச் செய்து வைக்குமாறு பல ஆண்டுகளுக்கு முன் இளவல் வீரமணி அறிவித்தவுடன், நான் அதனைச் செய்ய மாட்டேன் என்று மேடையிலேயே அவரிடம் கூறியிருக்கிறேன்.

திராவிடர் கழகத்தின் சார்பில் தற்போது அறிவித்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்குக்கூட, யாரையும் அவர் கட்டாயப்படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் நிகழ்ச்சி 14-4-2015 அன்று காலை 10 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், 7 மணி அளவிலேயே மிக எளிமையாக நடத்தி முடித்துவிட்டார்கள்.

ஆனால் அதற்குப் பிறகு, இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்களும் மற்றும் சிவசேனா கட்சியினரும் திட்டமிட்டு, அத்துமீறி பெரியார் திடலுக்கு உள்ளேயே புகுந்து வன்முறை வெறியாட்டங்களில் இறங்கி தடியடி நடத்தியிருக்கிறார்கள். காவல் துறை அதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், காவல் துறையினரே அவர்களைத் தூண்டி விட்டு, பெரியார் திடலுக்குள் இருந்தவர்களைத் தாக்கச் செய்திருக்கிறார்களோ என்று சந்தேகப்படும் அளவுக்கு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

அண்மைக் காலத்தில் இந்துத்துவா மற்றும் சிவசேனா கட்சியினர் தமிழகத்தில் தொடர்ந்து விரும்பத்தகாத செயல்களில் இறங்கி, தமிழகத்தை வன்முறைக்களமாக மாற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டு வருகிறார்கள்.

மத்திய பா.ஜ.க. அரசின் கண் ஜாடைக்காகக் காத்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சியினரும் இவர்களின் வன்முறைச் செயல்களைக் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

மேலும், பெரியார் திடல் வரை வந்து கலகம் விளைவித்தவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பெரியார் திடலிலிருந்து வெளியே வந்த திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களையே பத்து பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல் துறையினரின் இந்த அக்கிரமச் செயலைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x