Last Updated : 27 Apr, 2015 05:25 PM

 

Published : 27 Apr 2015 05:25 PM
Last Updated : 27 Apr 2015 05:25 PM

மூடப்படும் நிலையிலிருந்து மீண்ட கிராம பள்ளி: ஆசிரியைகளின் முயற்சியால் நடுநிலை பள்ளியாக தரம் உயர்வு

மதுரை அருகே மூடப்படும் நிலையிலிருந்து மீண்ட அரசு தொடக்கப் பள்ளி, ஆசிரியைகளின் தொடர் முயற்சியால், தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், ஆசிரியர்களின் அலட்சியப் போக்காலும், கிராமப் புறங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து பல பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து கிராமத்தில் மூடப்பட்ட நிலையில் இருந்த தொடக்கப் பள்ளி, ஆசிரியைகளின் தொடர் முயற்சியால் தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில், கடந்த 1960-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அப்பகுதிக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் இங்கு படித்தனர். நாளடைவில் இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், பிற காரணங்களாலும் போதிய மாணவர் சேர்க்கையின்றி கடந்த 2000-ம் ஆண்டில், இந்தப் பள்ளியை மூட கல்வித்துறை ஆலோசித்தது.

அப்போது, இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியைகளின் தொடர் முயற்சியால் தற்போது இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை அமிர்த சிரோன்மணி ‘தி இந்து’ விடம் கூறியது: கடந்த 2000-ம் ஆண்டு ஆசிரியை பணியில் சேர இப்பள்ளியை தேர்வு செய்தேன். ஆனால், போதுமான மாணவர் சேர்க்கையின்றி இந்த பள்ளியில் 6 பேர் மட்டும் படித்து வந்ததால் மூட ஆலோசிக்கப்பட்டது.

இதனால், என்னை வேறு பள்ளியை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தினர். ஆனால், சில நாட்கள் இங்கு பணிபுரிய அனுமதி தரும்படி கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து பணியில் சேர்ந்தேன்.

பின்னர் சீமானூத்து கிராமத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று பெற்றோரிடம் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்படி வலியுறுத் தினோம். அடிக்கடி பெற்றோர் கூட்டங்களை நடத்தி, கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தோம். அதற்கு பெற்றோரும் ஒத்துழைப்பு கொடுத்ததால், தற்போது எந்தவொரு மாணவரும் பிற ஊர்களுக்கு படிக்கச் செல்வதில்லை. மாணவர்களின் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தியதால் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கை அதிகரித்தது. 2008-ம் ஆண்டில் இங்கு 40 மாணவர்கள் படித்தனர். அப்போது, இப்பள்ளி சிறந்த மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.

இதையடுத்து, 2009-ம் ஆண்டில் இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின் பாண்டி உமாதேவி என்பவர் தலைமை ஆசிரியையாக இங்கு பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். தற்போது இங்கு 107 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஆரம்பக் கல்வியை முடித்து, உசிலம்பட்டி மற்றும் பிற ஊர்களில் உயர்நிலைப் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியர் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் எடுத்துவருவது எங்களுக்கு மகிழ்ச் சியாக உள்ளது. எங்களது உழைப்பு வீண் போகவில்லை.

ஆனால், இப்பள்ளிக்கு இன்னும் சுற்றுச்சுவர் இல்லை. போதுமான கழிப்பறை வசதிகளும் இல்லை. ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதுபோன்ற குறைபாடுகளை களைய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் இப் பள்ளியில் மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x