Published : 24 Mar 2014 09:30 AM
Last Updated : 24 Mar 2014 09:30 AM

சாலை வழியாக ஜெ. சென்றால் திமுகவின் சாதனைகள் தெரியும்: ஸ்டாலின்

திமுக என்ன செய்திருக்கிறது என்பதை ஜெயலலிதா சாலை வழியாக சென்றால் பார்க்கலாம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக ஞாயிற்றுக் கிழமை சிதம்பரம் வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அங்கு பேசியதாவது: மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக எதையும்செய்யவில்லை என ஜெயலலிதா பேசி வருகிறார். திமுக என்ன செய்திருக்கிறது என்பதை ஜெயலலிதா சாலைவழியாக சென்றால் பார்க்கலாம், அதை விட்டு வான்வழியே சென்றால் எப்படிப் பார்க்கமுடியும்?

ஜெயலலிதா தேர்தலுக்கு தேர்தல் மட்டும்தான் மக்களை சந்திக்க வருகிறார். கடந்த 3 ஆண்டுகளில் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 300 அறிக்கைகளை படித்துள்ளார். 110 விதி எதற்கு எப்போது பயன்படுத்தவேண்டும் என்ற வரையறையின்றி அறிக்கை அளித்துள்ளார்.

சிதம்பரத்தில் சுவாமி சகஜானந் தாவிற்கு மணிமண்டபம் கட்டப் படும் என 110 விதியின் கீழ் அறிவித்தார். ஆனால், அக்கட்டிடம் கட்டுவதற்கு முயற்சியே எடுக்க வில்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. பகலிலேயே பெண்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. தமிழகத்தை காப்பாற்ற, மத்தியில் திமுக அங்கம் வகிக்கிற ஆட்சி அமைய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திருமாவளவனுக்கு வாக்களியுங்கள் என மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x