Published : 22 Apr 2015 10:31 AM
Last Updated : 22 Apr 2015 10:31 AM

ஹெச்சிஎல் நிகர லாபம் 3.6 சதவீதம் உயர்வு

இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் 3.6 சதவீதம் நிகரலாபம் கண்டுள்ளது. நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது. மூன்றாவது காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.1,683 கோடி அடைந்துள்ளது. ஏற்ற இறக்கமான சந்தை சூழ்நிலையிலும் ஹெச்சிஎல் நிறுவனம் ஏற்றத்தை சந்தித்துள்ளது.

ஜூலை - ஜூன் மாதங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் இது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,624 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் 11 சதவீதம் உயர்ந்து ரூ.9,267 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வருமானம் ரூ.8,379 கோடியாக இருந்தது.

பங்குச்சந்தை எதிர்பார்ப்புக்கு கீழே முடிவுகள் வந்ததால் வர்த்தகத்தின் இடையில் 10 சதவீத அளவுக்கு சந்தையில் சரிவு இருந்தது. ஆனால் வர்த்தகம் முடியும் போது 3.64 சதவீதம் அளவுக்கு சரிந்து 890 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

நடப்பு காலாண்டில் 142 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய செலாவணியால் நஷ்டம் அடைந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 15 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய செலாவணி மூலம் லாபம் கிடைத்தது.

எங்களுடைய லாப வரம்பு 21 முதல் 22 சதவீதம் வரை இருக்கும் என்று ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் குப்தா தெரிவித்தார். ஒரு பங்குக்கு ரூ.4 டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் 3944 நபர்கள் புதிதாக இணைந்திருக்கிறார்கள். மார்ச் 31 நிலவரப்படி நிறுவனத்தில் 1,04,184 நபர்கள் பணிபுரிகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x