Last Updated : 25 Mar, 2015 08:35 AM

 

Published : 25 Mar 2015 08:35 AM
Last Updated : 25 Mar 2015 08:35 AM

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வேலைவாய்ப்பின்றி பெருகும் கொலைகள்: தொழிற்சாலை தொடங்க தமிழக பட்ஜெட்டில் வழி பிறக்குமா?

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு இன்மை யால் வன்முறை பெருகி வருவ தாக சமூக ஆர்வலர்கள் பலர் கருதுகிறார்கள்.

தென்மாவட்டங்களில் 1990-95-ம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஜாதிய வன்முறைகளை அடுத்து இங்கு ஆய்வு மேற்கொண்ட நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான குழுவினர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொழில் வாய்ப்பு களை அதிகப்படுத்தி, இளைஞர் களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தால் வன் முறைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று அறிக்கை அளித்தனர். ஆனால் அந்த குழுவின் பரிந்துரைகள் எதுவும் செயலாக்கத்துக்கு வரவில்லை.

நாங்குநேரியில் பல்துறை தொழில்நுட்ப பூங்காவும், கங்கை கொண்டானில் ஐ.டி. தொழில் நுட்ப பூங்காவும் கொண்டுவரப்பட் டாலும் எவ்வித மாற்றமும் நிகழ வில்லை. இதற்கு தொழில்நுட்ப பூங்கா திட்டங்கள் தோல்வியில் முடிந்ததுதான் காரணம்.

போட்டி பூச்சந்தை

வள்ளியூரில் சிட்கோ இன்டஸ்டிரி எஸ்டேட் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப் படவில்லை. நவீனத்துவத்தை புகுத்தாததால் திருநெல்வேலி பேட்டையில் பாரம்பரிய நூற் பாலை மூடப்பட்டிருக்கிறது. கோபாலசமுத்திரத்தில் 2001-2006ம் ஆண்டுக்குள் டெக்ஸ் டைல்ஸ் பூங்கா அமைக்க உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் செயலாகவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் பாரம்பரியமிக்க பூச்சந்தைக்கு போட்டியாக திருநெல்வேலி- காவல்கிணறு பகுதியில் பூச்சந்தையை கொண்டு வந்தனர். அதுவும் தோல்வி யடைந்தது. சங்கரன்கோவில், ராதாபுரம் வட்டாரங்களில் வாசனை திரவிய ஆலை அமைக்கும் திட்டம்குறித்து தேர்தல்தோறும் வெற்று வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன.

சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் காய்கறி களும், களக்காடு வட்டாரத்தில் வாழையும், புளியங்குடியில் எலுமிச்சையும் அமோகமாக விளைகின்றன. இந்த உற்பத்திப் பொருட்களைக் கொண்டு தொழில் தொடங்க எந்த அரசும் துணைபுரியவில்லை.

நாங்குநேரியில் ரயில் பெட்டித் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம், புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை தொழில்பூங்கா திட்டம் போன்றவையும் வெற்று வாக்குறுதிகளாகவே உள்ளன. இது போன்ற தொழில் திட்டங்களை தொடங்குவதில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை செலுத்தாமலே இருப்பதால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகிவிட்டது.

இளைஞர்களை தவறாக வழிநடத்தும் அரசியல்வாதிகள், ஆதிக்க சக்திகள், ஜாதிய அமைப்புகள் என்று பல அம்சங்களும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் புரையோடியிருக்கின்றன. இதன் காரணமாகவே கடந்த சில வாரங்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களி டையே பல மோதல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

வட்டியால் நேரும் சோகம்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கந்துவட்டி, சிட்டைவட்டி, நாள் வட்டி, கிழமை வட்டி என்றெல்லாம் பல பரிணாமங்களில் வட்டி வசூல் நடைபெறுகின்றன. இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் காவல்துறை யும், ஆட்சியாளர்களும் மவுன மாகயிருக்கிறார்கள். சில மாதங் களுக்குமுன் தச்சநல்லூரில் கந்துவட்டியால் சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் கோபி கொலை செய்யப் பட்டார். அதனையடுத்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல போராட்டங்களை முன்னெடுத் தாலும் வன்முறைகள் தொடர்கின் றன.

பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

சமூக ஆர்வலரும், வழக்கறிஞ ருமான டி.ஏ. பிரபாகர் கூறும்போது, ‘ஜாதி பிரச்சினைகளுக்கு மூலக் காரணமாக இருப்பது அரசியல் கட்சிகள்தான்.

குறிப்பிட்ட ஜாதியினர் அந்தந்த அரசியல் கட்சிகளில் கோலோச்சுகிறார்கள். இதுபோல் தொழிற்சங்கங்களிலும் அரசியலும், ஜாதியும் புகுந்து விட்டன. தென் மாவட்டங் களில் முடங்கியுள்ள தொழிற் சாலைகளுக்கு உயிரூட்டி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தால் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. தமிழக பட்ஜெட்டில் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று தென்மாவட்ட மக்கள் எதிர்பார்த்துள்ளனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x