Published : 23 Mar 2015 04:37 PM
Last Updated : 23 Mar 2015 04:37 PM
இன்றைய சூழலில் நிறைய எழுதி வாசகர்களை படிக்க வைப்பது சாத்தியமில்லாதது. சுருக்கமும், அழுத்தமும் உள்ள எழுத்துக்களே தேவையாக உள்ளது என பொள்ளாச்சியில் நடைபெற்ற இலக்கியக் கூட்டத்தில் எழுத்தாளர் வா.மு.கோமு பேசினார்.
'தீ இனிது' இலக்கிய இயக்கத்தின் சார்பாக 2-ம் இலக்கியக் கூட்டம் பொள்ளாச்சி டி.இ.எல்.சி. பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு கவிஞர் சோழநிலா தலைமை வகித்தார். செங்கவின் வரவேற்றார்.
கவிஞர் திலகன் எழுதிய 'புலனுதிர் காலம்' கவிதைத் தொகுப்பை செ.இளங்கோவன் அறிமுகம் செய்து பேசினார். அதைத் தொடர்ந்து கவிஞர் திலகன் ஏற்புரை வழங்கினார். எழுத்தாளர் வா.மு.கோமு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது, ''உண்மையான எழுத்தாளர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியதாகிவிட்டது. எழுத்தையே வாழ்க்கையாகக் கொண்டுவாழ்வது இங்கு மிகத் துயரமானது.
மேலும் இன்று எழுத்தாளர்கள் பல்வேறு இடைஞ்சல்களை சமாளிக்க வேண்டியுள்ளது. எழுத்தாளர்கள் தங்களுக்கு கருத்துரிமை உள்ளது என்பதை தாங்களே சொல்லிக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் கருத்துரிமை இங்கு இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.
நிறைய எழுதி வாசகர்களைப் படிக்க வைப்பது இன்றைக்கு சாத்தியமில்லாதது. அதைப் படிக்க வாசகர்களுக்கும் இங்கே நேரமில்லை. சுருக்கமும், அழுத்தமும் உள்ள எழுத்துக்களே இன்றைய தேவையாக உள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT