Published : 23 Mar 2015 10:30 AM
Last Updated : 23 Mar 2015 10:30 AM

தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.597 கோடி தராமல் மத்திய அரசு இழுத்தடிப்பு: ஒன்றரை ஆண்டாக கிடப்பில் உள்ளதாக தகவல்

நலிவுற்ற கூட்டுறவு வங்கிகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு அறிவித்த ரூ.597 கோடி கடந்த ஒன்றரை ஆண்டுகளாகியும் தமிழகத்துக்குக் கிடைக்கவில்லை.

தேசிய முன்னணி ஆட்சியின் போது 1989-ல் பிரதமராக இருந்த வி.பி.சிங், ரூ.10 ஆயிரம் வரையிலான விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்தார். இதனால் இந்தியா முழுவதும் குறுகிய காலக் கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வட்டி இழப்பு ஏற்பட்டது.

இதனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநில கூட்டுறவு வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

இந்நிலையில், 2004-ல் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்ட வைத்தியநாதன் கமிட்டி, நாடு முழுவதும் நலிவுற்ற கூட்டுறவு வங்கிகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிவாரணம் அளிக்கப் பரிந்துரைத் தது. இதை ஏற்று கூட்டுறவு வங்கிகளை மீட்க ரூ.14,839 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டது.

இதில் அந்தந்த மாநிலங்களுக்கு முதல் தவணையாக குறிப்பிட்ட வீதமும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்தி முடித்த பிறகு எஞ்சிய தொகையையும் வழங்க வைத்தியநாதன் கமிட்டி சிபாரிசு செய்திருந்தது.

இதையடுத்து தமிழகத்துக்கு வர வேண்டிய சுமார் ரூ.1,600 கோடியில் ரூ.1,000 கோடி கடந்த திமுக ஆட்சியில் முதல் தவணையாக பெறப்பட்டது. அதே சமயம், முறைகேடு புகார்களைத் தொடர்ந்து அப்போது கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டதால், எஞ்சிய தொகை வராமல் தடைபட்டது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. ஆனாலும் பரிந்துரைத்தபடி தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு வரவேண்டிய ரூ.597 கோடி இன் னும் வந்து சேரவில்லை.

இதுகுறித்து கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறும்போது, ’’மத்திய அரசின் நிவாரண நிதியை நபார்டு வங்கிதான் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு வழங்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட காலத்துக்குள் கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்தி முடிக்காததால், நிவாரண நிதியை நபார்டு வங்கி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டது.

உரிய காரணங்களுடன் தமிழக அரசு மீண்டும் அழுத்தம் கொடுத்தால் மட்டுமே நிதி கிடைக்கும்” என்றனர்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவிடம் கேட்ட போது, “ 597 கோடி மட்டுமல்ல; கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்துவதற்கும் நிதியுதவி அளிப்ப தாகக் சொல்லி இருந்தார்கள். அதுவும் வரவில்லை.

இதுகுறித்து அதிமுக நாடாளுமன்றக் குழு தலைவர் தம்பித்துரையிடம் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கைக்கு வலியுறுத் தப்பட்டது. துறை அதிகாரிகளும் இது தொடர்பான முயற்சியில் உள் ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x