Published : 17 Mar 2015 09:56 AM
Last Updated : 17 Mar 2015 09:56 AM

மாணவர் சேர்க்கை நடைமுறை குறித்து சுயநிதி பொறியியல் கல்லூரி நிர்வாகிகளுடன் அப்துல் ஹாதி கமிட்டி மார்ச் 30-ல் ஆலோசனை

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை இறுதி செய்யும் வகையில் நீதிபதி அப்துல் ஹாதி கமிட்டி, கல்லூரி நிர்வாகிகளுடன் 30-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்துகிறது.

தமிழகத்தில் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை நீதிபதி அப்துல் ஹாதி கமிட்டி கண்காணித்து வருகிறது. பி.இ., பி.டெக் படிப்புகளில் 65 சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொது கலந்தாய்வு மூலமும், மீதமுள்ள 35 சதவீத இடங்கள் கல்லூரி நிர்வாகத்தாலும் நிரப்பப்படுகின்றன. சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரியாக இருந்தால் 50 சதவீத இடங்கள் பொது கலந்தாய்வு முறையிலும் 50 சதவீத இடங்கள் கல்லூரி நிர்வாகத்தாலும் நிரப்பப் படும்.

இந்நிலையில், மேற்கண்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான (2015-16) மாணவர் சேர்க்கை நடைமுறைகள் இறுதி செய்யப்பட உள்ளன.

இதற்காக மார்ச் 30-ம் தேதி தனியார் கல்லூரி நிர்வாகிகளுடன் நீதிபதி அப்துல் ஹாதி கமிட்டி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி பணியாளர் குடியிருப்பில் இயங்கும் கமிட்டி அலுவலகத்தில் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு கூட்டம் நடக்கவுள்ளதாக கமிட்டியின் உறுப்பினர் - செயலரும், தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலருமான அபூர்வா அறிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாற்றம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x