Last Updated : 17 Mar, 2015 10:42 AM

 

Published : 17 Mar 2015 10:42 AM
Last Updated : 17 Mar 2015 10:42 AM

புதுச்சேரி அருகே புதுமை: கோயிலைச் சுற்றிலும் கார், வீடு, குழந்தை பொம்மைகள் - வேண்டுதலுக்காக செய்து தரும் பக்தர்கள்

புதுச்சேரி அருகே உள்ள ஒரு கோயிலில் குழந்தை, கார், வீடு, மனித உடல் உறுப்பு போன்றவற்றை பொம்மைகளாக செய்து வேண்டுதலுக்காக பக்தர்கள் வைக்கும் புதுமை நடைபெறுகிறது.

புதுச்சேரி அருகே கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தென்னம்பாக்கம் கிராமத்தில் அழகு முத்து அய்யனார் கோயில் உள்ளது. புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும், வில்லியனூர் வழியாகவும் இந்த கோயிலுக்கு செல்லலாம். இந்த கோயிலுக்கு சென்றால் குழந்தை, கார், வீடு, கை, கால், மனித உருவம் போன்ற சிமென்ட் பொம்மைகள் வரவேற்கின்றன. முதலில், இந்த பொம்மைகளை வணங்கிய பிறகே கோயிலில் உள்ள கடவுளை வணங்குவதற்கு மக்கள் செல்கின்றனர்.

அழகர் கோயிலுக்கு பின் பகுதியில் கிணற்றின் மீது கட்டப்பட்ட அழகர் சித்தர் கோயில் உள்ளது. 366 ஆண்டுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு வந்த சித்தர், இந்த பகுதி மக்களுடைய பல்வேறு நோய்களை குணமாக்கி இருக்கிறார். பின்னர், அந்த கிணற்றில் சமாதி அடைந்துள்ளார். அந்த கிணற்றின் மேலேயே சித்தருக்கு எளிமையான கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் முகப்பில் ஆலமரத்தின் அடியில் உள்ள அழகு முத்து அய்யனாரின் வலது கையில் பிரம்மாண்டமான வாள் இருக்கிறது. அந்த வாளில் ஏராளமான சீட்டுகள் கட்டப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பக்தர்களின் வேண்டுதல் சீட்டுகள்.

பக்தர்கள் தங்களின் வேண்டுதலை தாளில் எழுதி அழகர் கையில் இருக்கும் வாளில் கட்டுகின்றனர். பின்னர், அந்த வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்தி கடனாக சிமென்ட்டில் செய்யப்பட்ட பொம்மைகளை செய்து வைக்கின்றனர். அவர்களின் வேண்டுதல் என்னவோ, அதற்கு ஏற்ற சிலைகளை பொம்மையாக வைத்து செல்வதால் கோயிலை சுற்றிலும் ஏராளமான சிமென்ட் பொம்மை சிலைகள் நிறைந்து காணப்படுகின்றன.

சிமென்ட் சிலைகளை செய்து தரும் நல்லாத்தூரைச் சேர்ந்த அழகுமுத்து ஸ்தபதி என்பவர், ‘தி இந்து’விடம் கூறும்போது, “கோயிலில் தங்கள் குறைகளை கூறி, அது நிறைவேறினால் நேர்த்திக் கடனாக ஒரு பொருளை வாங்கி தருவார்கள். அழகர் கோயிலுக்கு வந்து வழிபடுவோர், சிமென்ட் சிலை வைக்கிறார்கள். குழந்தை வரம் வேண்டியோர், குழந்தை சிலைகளை வைக்கின்றனர். ஒருசிலர், தங்கள் பிள்ளைகள் டாக்டர், வழக்கறிஞர், போலீஸ் போன்ற பதவிகளை பெற விரும்புவார்கள். அந்த வேண்டுதல் நிறைவேறியதும் அதுபோன்ற சிலைகளை வைக்கிறார்கள். ஒரு சிலருக்கு கை, கால் பிரச்சினை ஏற்பட்டு அது சரியானதும் அந்த உறுப்பையே உருவமாக செய்து வைக்கின்றனர். அதுபோல, கார், வீடு வேண்டி நிறைவேறியதும் அந்த சிலைகளை வைக்கின்றனர். கோயிலைச் சுற்றியுள்ள இந்த சிலைகளை வணங்கி சுற்றிய பிறகே கோயிலுக்குள் பக்தர்கள் வருவார்கள்” என்று குறிப்பிட்டார்.

சாமி கும்பிட வந்தவர்களிடம் கேட்டபோது, "எங்களுக்கு பிரச்சினை என்றால் கடவுளிடம்தான் முறையிடுவோம். பிரச்சினை தீர்ந்ததும் கடவுளுக்கு நன்றிக் கடனாக பொம்மைகளை செய்து வைக்கிறோம். எங்களுக்கு தெரிந்த பாரம்பரிய வழிமுறை இது. ஆண்டுதோறும் சித்திரை மாதம், முதல் திங்கள்கிழமை அன்று திருவிழா நடைபெறும். அப்போது இந்த சிலைகளுக்கு பக்தர்களே வர்ணம் பூசுவார்கள். மேலும், அந்த திருவிழாவில் 100 நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் 100 தவில் வித்வான்கள் ஒரே நேரத்தில் வாசிப்பார்கள்” என்றனர்.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிமென்ட் பொம்மைகள் சூழ புதுமையாக அமைந்துள்ள அழகு முத்து அய்யனார் கோயிலை புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டினரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x