Published : 05 Mar 2015 03:51 PM
Last Updated : 05 Mar 2015 03:51 PM

அதிகாரி தற்கொலை வழக்கு: வேளாண் அமைச்சரை நீக்க ஈவிகேஎஸ் இளங்கோவன் வலியுறுத்தல்

திருநெல்வேலி செயற்பொறியாளர் எஸ். முத்துக்குமாரசாமி தற்கொலையில் பிரதான பங்கு வகித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தமிழக வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் எஸ். முத்துக்குமாரசாமி கடந்த 20.2.2015 அன்று தச்சநல்லூரில் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன.

நேர்மைக்கும், கடமைக்கும் பெயர் பெற்றவரான முத்துக்குமாரசாமியின் தற்கொலை முடிவில் தமிழக வேளாண்துறை அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி சம்மந்தப்பட்டிருக்கிறார் என்கிற தகவலை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தேன்.

இதை உறுதிப்படுத்துகிற வகையில் இன்று மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டிருக்கிறார். செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமிக்கு அடிக்கடி தொலைபேசி, செல்பேசிகள் மூலம் தொடர்பு கொண்டு அமைச்சரின் உதவியாளர்கள் பாண்டியன், தியாகராஜன் ஆகியோர் பலமுறை தொல்லை கொடுத்துள்ளனர். இவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

ஒரு அரசு அதிகாரி தற்கொலை செய்வதற்கு காரணமான அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கினால் மட்டும் போதாது. தற்கொலையில் பிரதான பங்கு வகித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக்கப்பட வேண்டும்.

இத்தற்கொலை வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரணை செய்வதற்கு ஆணை பிறப்பிக்க முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் தமிழக காவல்துறை விசாரித்தால் குற்றவாளிகள் தப்பிக்க காரணமாக அமைந்துவிடும். இதை அனுமதிக்கக் கூடாது.

அதற்கு மாறாக முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு காரணமான அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை பாதுகாக்கும் முயற்சியை தமிழக ஆட்சியாளர்கள் ஈடுபடுவார்களேயானால் அதை முறியக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அ.தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை எங்கும் ஊழல்; எதிலும் ஊழல் என்பது அன்றாட நடவடிக்கையாக மாறிவிட்டது. அமைச்சர்கள் எல்லோரும் வசூல் மன்னர்களாக மாறி வருகிறார்கள். வசூல் செய்த பணத்தை யாருக்கு கப்பம் கட்டுகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டபிறகும் திருந்தாதவர்கள் ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடாகும். இத்தகைய அவலநிலையில் இருந்து தமிழகத்தை மீட்கிற பொறுப்பு ஜனநாயக ஊழல் எதிர்ப்பு சக்திகளுக்கு இருக்கிறது. இத்தற்கொலைக்கு நீதி கிடைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் போராட முன்வர வேண்டும்.'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x