Published : 22 May 2014 10:30 AM
Last Updated : 22 May 2014 10:30 AM

‘சைடு டிஷ்’ தகராறில் இளைஞர் கொலை: அதிர்ச்சியில் பொதுமக்கள், போலீஸார்

பழனியில் டாஸ்மாக் கடையில் ‘சைடு டிஷ்’ தகராறில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார். மற்றொருவர் உயிருக்குப் போராடி வருகிறார். சிறு, சிறு பிரச்சினைகளுக்குக்கூட கொலைகள் நடப்பதால் பொதுமக்களும், போலீஸாரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பழனி அருகேயுள்ள சிந்தலவாடம் பட்டி மடத்துதோட்டத்தைச் சேர்ந்தவர் பூபதி(33). இவர், செவ்வாய்க்கிழமை இரவு சிந்தலவாடம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்கச் சென்றார். அப்போது ‘சைடு டிஷ்’ வர தாமதமானதால் அருகில் இருந்த காளிப்பட்டியைச் சேர்ந்த கணேசனின் ‘சைடு டிஷ்ஷை’ எடுத்துச் சாப்பிட்டாராம்.

இதனால், கணேசனுக்கும், பூபதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த மற்ற ‘குடிமகன்கள்’ இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது, பூபதி திடீரென பீர் பாட்டிலை எடுத்து உடைத்து, அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டித் தாக்கினாராம்.

இதில் கணேசன் (35), மஞ்சநாயக்கண்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (50), ஞானசேகர் (29), முத்துச்சாமி (53), சுப்பிரமணி (45), மணியன் (45) ஆகியோர் படுகாயமடைந்தனர். ஒருவழியாக மற்றவர்கள் பூபதியைப் பிடித்து சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால், கணேசனும், அவருடன் வந்த சிலரும் பூபதியைப் பின்தொடர்ந்து சென்று வழிமறித்து அவரைத் தாக்கியுள்ளனர். அப்போது, பூபதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேசனைக் குத்தியதால், ஆத்திரமடைந்த கணேசனுடன் வந்தவர்கள் பூபதியை அரிவாளால் வெட்டியதில் பூபதி, கணேசன் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர்.

கணேசன் கோவை அரசு மருத்துவமனையிலும் பூபதி மதுரை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் பூபதி புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சத்திரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

‘புறாவுக்குப் போரா?’- போலீஸார் அதிர்ச்சி…

திண்டுக்கல் மாவட்டத்தில் அண்மைக்காலமாக சிறுசிறு பிரச்சினைகளுக்குக்கூட கொலைகள் நேரிடுகின்றன. கடந்த 5 மாதங்களில் மட்டும் 30 கொலைகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான கொலைகள் சாதாரண பிரச்சினைகளுக்காக நடந்தவை.

ஒரு திரைப்படத்தில் ‘புறாவுக்குப் போரா?’ என்று சிரிப்பு நடிகர் கூறுவார். அந்தக் காட்சியைப் பார்ப்பவர்களுக்கு அது நகைச்சுவையாக இருக்கும். ஆனால், அந்த வார்த்தைக்கேற்ப திண்டுக்கல்லில் சிறுசிறு பிரச்சினைகளுக்கும் கொலைகள் அரங்கேறுவதால் பொதுமக்களும், போலீஸாரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x