Published : 27 Mar 2015 10:43 AM
Last Updated : 27 Mar 2015 10:43 AM
செல்போன் மூலம் சென்னை புறநகர் ரயில்களின் டிக்கெட்டைப் பெறும் வசதி, பயணிகளிடம் பெரிய அளவில் சென்று சேராமல் உள்ளது. இத்திட்டம் பற்றி போதுமான விளம்பரம் செய்யப்படா ததே இதற்கு காரணம் என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் நெரிசலைத் தவிர்க்கும் வகையில் செல்போன் மூலம் புறநகர் மின்ரயில் டிக்கெட் முன்பதிவு (எம்-டிக்கெட்டிங்) செய்யும் வசதி கடந்த ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
செல் போன்களைப் பயன்படுத்துபவர் கள் ‘பிளேஸ்டோரில்‘ ‘யூடிஎஸ்’ (UTS on mobile) என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதனுள்ளே சென்று, செல்போன் எண் மூலம் இவ்வசதிக்காக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு (ஏடிஎம் கார்டு) இருந்தால் அதன் மூலம் செல்போன் ‘ரீசார்ஜ்’ (குறைந்தபட்சம் ரூ.50) செய்வது போல் தேவைப்படும்போது அதற் கான இருப்புத்தொகையின் மதிப்பை கூட்டிக்கொள்ளலாம்.
‘யூடிஎஸ்’ செயலி மூலம் செல்போனில் டிக்கெட் முன்பதிவு செய்ததும், உங்களது போனுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பாஸ்வேர்டு (ஒன்டைம் பாஸ்வேர்டு) அனுப்பப்படும். ரயில் நிலையத்துக் குச் சென்றதும், அங்குள்ள ‘ஏடிவிஎம்’ இயந்திரத்தில் ‘மொபைல் டிக்கெட்டிங்’ என்னும் மெனுவில் ‘ஒன்டைம் பாஸ் வேர்டை’ குறியீடு செய்ததும், டிக்கெட்டின் ‘பிரின்ட்அவுட்’ வந்து விடும்.
தானியங்கி இயந்திரம் பழுதாகியிருந்தாலோ, அல்லது டிக் கெட்டைப் பெறத் தெரியவில்லை என்றாலோ, அருகில் உள்ள டிக் கெட் கவுன்ட்டரில் ‘ஒன்டைம் பாஸ் வேர்டை’ தெரிவித்தால் அவர்கள் டிக்கெட் தந்துவிடுவார்கள்.
சென்னையில் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த இரண்டரை மாதங்களில் 700-க்கும் குறைவானவர்களே இதைப் பயன்படுத்தியுள்ளனர். இப்படியொரு வசதி இருப்பதைப் பற்றி பயணிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப் படுகிறது.
மேலும், ‘ஏவிடிஎம்’ வசதி, அரக்கோணம் மார்க்கத்தில் அம்பத் தூர், பெரம்பூர் ரயில் நிலையங் களிலும், கும்மிடிப்பூண்டி மார்க்கத் தில் திருவொற்றியூர் ரயில் நிலையத்திலும் மட்டுமே உள்ளன. அதனால் இவ்வசதியைப் பற்றி அறிந்திருந்தாலும் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள் ளது. அதேநேரத்தில், கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் 14 ரயில் நிலையங்களில் ‘ஏவிடிஎம்’ வசதி உள்ளது. அதனால் அந்த மார்க்கத்தில் சிலருக்கு இதைப் பற்றி நன்கு தெரிந்துள்ளது.
விழிப்புணர்வு இல்லை
இது குறித்து ஆர்.யோகானந்த் என்ற ரயில் பயணி கூறும்போது, “இப்படியொரு திட்டம் இருப்பது பெரும்பாலானோருக்குத் தெரிய வில்லை. மேலும் செல்போனில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும், ரயில் நிலையத்துக்குப் போய் ‘ஏடிவிஎம்’ இயந்திரத்தில் டிக்கெட் எடுக்கவேண்டும். அதற்குப் பதிலாக, ஒரேயடியாக வரிசை யில் நின்றே டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாமே என்ற எண்ணம் ஏற்படுகிறது” என்றார்.
குரோம்பேட்டை ரயில் பயணி கள் சங்கத்தின் தலைவர் வி.சந்தா னம் கூறும்போது, “ரயில்வே ஊழியர்களுக்குக்கூட இவ்வசதி பற்றி தெரியவில்லை. எனவே இதுபற்றி, ரயில்வே துறை, பொதுமக்களின் மனதில் பதியும் வகையில் விளம்பரங்களை வெளியிடவேண்டும். எஸ்.எம்.எஸ். மூலம் டிக்கெட் பதிவு செய்யவும் ஏற்பாடுசெய்யவேண்டும்” என்றார்.
பெருங்களத்தூரை சேர்ந்த பிரசன்னா என்ற அரசு ஊழியர் கூறும்போது, “அனைவரும் பயன் படுத்தும் வகையில் இதனை எளிமைப்படுத்த வேண்டும். ‘ஏடிவிஎம்’ இயந்திரங்களை எல்லா நிலையங்களிலும் நிறுவவேண்டும்” என்றார்.
எஸ்.எம்.எஸ். மூலம் டிக்கெட்
இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தெற்கு ரயில்வே உயரதி காரிகள் கூறும்போது, “சென்னை யில் அதிக எண்ணிக்கையிலான ரயில் நிலையங்களில் ஏடிவிஎம் இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதுதவிர, எஸ்.எம்.எஸ் மூலம் டிக்கெட்டை வழங்கும் திட்டத்தையும் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT