Published : 09 Mar 2015 10:25 AM
Last Updated : 09 Mar 2015 10:25 AM

சட்டப்பேரவை தேர்தலுக்கு வியூகம்: ஒரு மாதத்தில் 20 நிர்வாகிகள் மாற்றம் - விஜயகாந்த் அதிரடி நடவடிக்கை

சட்டப்பேரவை தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் தேமுதிகவை வலுப்படுத்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அவர் மாற்றியுள்ளார்.

தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவையில் ஜனவரி 7-ம் தேதி நடந்தது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து 1500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, கடந்த மாதம் 1-ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் தனித் தனியாக நடந்தது. இதில், மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து விஜயகாந்த் ஆய்வு செய்தார். கட்சி வளர்ச்சிக்காக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் விஜயகாந்த் ஈடுபட்டுள்ளார். கட்சிப் பணிகளை ஒழுங்காக செய்யாதவர்களை பதவியில் இருந்து நீக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதன்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே மாவட்டம், நகரம், ஒன்றியம் என 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சரியாக பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை தொடரும் என விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்’’ என்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர், கரூர் மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை விஜயகாந்த் நேற்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக கரூர் மாவட்ட செயலாளராக தங்கவேல் இன்று (8-ம் தேதி) முதல் நியமிக்கப்படுகிறார். இதேபோல், தேமுதிக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக ஜெயப்பிரகாஷ் நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே இவர், வகித்து வந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். தேமுதிக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், காஞ்சிபுரம் நகர செயலாளராக டி.நித்தியகுமார் நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே அவர் வகித்து வந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x