Published : 04 Mar 2015 10:03 AM
Last Updated : 04 Mar 2015 10:03 AM

சவுடு மண் குவாரிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு: சின்னம்பேடு பெரிய ஏரி முற்றுகை - நிரந்தரமாக மூட வலியுறுத்தல்

சின்னம்பேடு பெரிய ஏரியில் சவுடு மண் குவாரி செயல்பட எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் நேற்று ஏரியை முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் ஆரணி அருகே உள்ளது சின்னம்பேடு பெரிய ஏரி. 1,500 ஏக்கரிலான இந்த ஏரியையொட்டி சின்னம்பேடு, வடக்கு நல்லூர், அகரம், ஆமிதநல்லூர், கீழ்மேனி, துரைநல்லூர் என 10 கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் உள்ள 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்களுக்கு முக்கிய நீராதாரமாக சின்னம்பேடு பெரிய ஏரி விளங்கி வருகிறது.

இதனிடையே, சின்னம்பேடு பெரிய ஏரியில் சவுடு மண் குவாரி நடத்த அரசு அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், அதைக் கருத்தில் கொள்ளாமல் மண் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சின்னம்பேடு, துரைநல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான பொதுமக்கள், சின்னம்பேடு பெரிய ஏரியில் சவுடு மண் குவாரி செயல்பட்டால், நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் எனக் கூறி, நேற்று சின்னம்பேடு பெரிய ஏரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சவுடு மண் குவாரிக்கு வந்த 10-க்கும் அதிகமான லாரிகளை சிறைபிடித்தனர்.

பொன்னேரி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஆரணி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து, சவுடு மண் குவாரியை தற்காலிகமாக நிறுத்திவைத்த வருவாய்த் துறை அலுவலர்கள், நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x