Published : 15 Mar 2015 11:25 AM
Last Updated : 15 Mar 2015 11:25 AM

டாக்டர்களின் சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கக்கூடாது: சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை

பதிவு பெற்ற டாக்டர்களின் மருந்து குறிப்பு சீட்டு இல்லாமல், பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கக்கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

குடும்பநலத்துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறைகளின் ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் அப்துல் காதர், குடும்பநலத்துறை இயக்குநர் ஆர்.கிருஷ்ணமுர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: பதிவு பெற்ற மருத்துவர் களின் மருந்து குறிப்புச் சீட்டு இல்லாமல், பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கக் கூடாது. மீறி வழங்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்துகள் தொடர்பாக பெறப்படும் புகார் களை ஆய்வு செய்து, தவறுகள் இருந்தால் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் வீரியத்தை கண்காணிக்க வேண்டும். பொதுமக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை ஆய்வு செய்து, அப்பாவி மக்களை பாதுகாத்தல் போன்ற பணிகளை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். காலாவதியான மருந்துகளை விற்பதும், இருப்பு வைப்பதும் குற்றமாகும். அதை மருந்து கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x