Published : 30 Mar 2015 08:58 AM
Last Updated : 30 Mar 2015 08:58 AM

மருத்துவக் கல்லூரி விடுதியில் பயிற்சி டாக்டர் மர்ம மரணம்: போதை பழக்கமா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில் பயிற்சி டாக்டர் ஒருவர் நேற்று இறந்தார். இதற்கு காரணம் போதைப் பழக்கமா? தற்கொலையா? என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலை சேர்ந்தவர் நிர்மல்தேவ் (25). அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக (எம்பிபிஎஸ் இறுதியாண்டு) பணியாற்றி வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் நிர்மல்தேவ் அறையின் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த மற்ற மாணவர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அறைக்குள் மயங்கிய நிலையில் இருந்த நிர்மலை பரிசோதனை செய்தபோது, அவர் இறந்தது தெரியவந்தது. இதுபற்றி போலீஸாருக்கு தகவல் கொடுக்காமல், அவரது உடலை பிரேதப் பரிசோதனைக் கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதற்குள் தகவல் அறிந்து வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதன்பின் உடல் பிரேதப் பரிசோதனைக் கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீஸார் நடத்திய சோதனையில் நிர்மல்தேவின் அறையில் ஏராளமான மதுபாட்டில்கள் மற்றும் மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அளவுக்கு அதிகமாக போதைக்கு அடிமையானதால் உயிரிழந்தாரா? காதல் தோல்வியால் தற்கொலையா? கல்லூரி நிர்வாகத்துடன் பிரச்சினையா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் கார்குழலி கூறும்போது, “நிர்மல் தேவ் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கித்தான் கல்லூரிக்கு வருவார். எப்போதாவதுதான் கல்லூரி விடுதியில் வந்து தங்குவார். அறைக்குள் சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இவர் எப்படி இறந்தார் என்பது பற்றி போலீஸ் விசாரணையில்தான் தெரியவரும். இதுபற்றி நாகர்கோவிலில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் சென்னையில் உள்ள உறவினர்களுக்கு தெரிவித்துவிட்டோம். பிரேதப் பரிசோதனை செய்து உடல் ஒப்படைக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x