

'சிங்கப்பூர் தந்தை' லீ க்வான் மறைவு தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில், "சிங்கப்பூரை உருவாக்கியவரும், தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை அந்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தவருமான லீ குவான் யூ காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக 31 ஆண்டுகள் பதவி வகித்தவர்; அதற்குப் பிறகும் இவர் கை காட்டுபவர் தான் அந்நாட்டின் பிரதமராக முடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால், அவ்வளவு செல்வாக்கு இருந்தும் எளிமையின் சின்னமாக திகழ்ந்தவர். சிறிய நாடான சிங்கப்பூரை அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் உலகின் சந்தையாக மாற்றி மக்களின் வளமான வாழ்க்கைக்கு வழி வகுத்தவர். சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பில் அக்கறை காட்டியவர். தமிழை சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்து மரியாதை செய்தவர்.
ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர். ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை தீவிரவாத ஒழிப்பு என்று வர்ணித்த நிலையில், அது இனப்படுகொலை என்று துணிச்சலுடன் கூறிய தலைவர் லீ குவான் யூ மட்டுமே. அதுமட்டுமின்றி, ‘‘இலங்கை அதிபர் இராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி; அவரைத் திருத்த முடியாது. ஈழத் தமிழர்களை சிங்களத்தால் வீழ்த்தி விட முடியாது. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க முடியாது; அந்நாட்டு பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு’’ என பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர். பிறப்பால் தமிழர் இல்லாவிட்டாலும் தமிழர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த லீ'யின் மறைவு தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்.
அவரை இழந்து வாடும் சிங்கப்பூர் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் மறைந்தாலும் அவரது புகழும், சாதனைகளும் என்றென்றும் வாழும்" என கூறியுள்ளார்.