Published : 02 Mar 2015 10:53 AM
Last Updated : 02 Mar 2015 10:53 AM

மதிய உணவு திட்டத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடி குறைப்பு: இந்திய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு

மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு மிகவும் குறைவான தொகை ஒதுக்கப்பட்டிருப்பதாக இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் சிவதாசன், செயலாளர் ரித்தாபிரத பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய பட்ஜெட் மாணவர் விரோத பட்ஜெட்டாக உள்ளது. பள்ளிக் கல்விக்கு கடந்த ஆண்டு ரூ.51.82 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.39.03 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் கல்விக்கான நிதி ரூ.1 கோடிக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.28.25 கோடி. இந்த ஆண்டு ரூ.22 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அறிவியல் கல்வி, ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி 25 சதவீதம் குறைந்துள்ளது. மதிய உணவு திட்டத்துக்கு கடந்த ஆண்டைவிட ரூ.4 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக இந்த பட்ஜெட்டில் கல்விக்கு என ஒதுக்கப்பட்டுள்ள ரூ.68,968 கோடி நிதி என்பது நாட்டின் மொத்த உற்பத்தியில் 3.8 சதவீதம் மட்டுமே. ஆனால், பணக்காரர்களுக்கான வரிச் சலுகை ரூ.5,49,984 கோடியில் இருந்து ரூ.5,89,285 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக் கல்வி நிறுவனங்களின் தரம் குறையும். அது கல்வியை மேலும் தனியார்மயமாக்கவும், வணிகமயமாக்கவும் வகைசெய்யும். இதை எதிர்த்து மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x