Published : 27 Mar 2015 11:02 AM
Last Updated : 27 Mar 2015 11:02 AM
மலேசியாவில் இருந்து 4 பேர் கடத்திவந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியாவில் இருந்து நேற்று அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜமீன் பானு(35), திருச்சி தென்னூரைச் சேர்ந்த ஹைதர் அலி(42), அலிமாகனி(32) ஆகிய 3 பேரும் தலா 600 கிராம் வீதம் 1,800 கிராம் தங்கத்தை உடலுக்குள் மறைத்து கடத்தி வந்ததை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.47 லட்சம் ஆகும்.
இதேபோல, மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கு மலிண்டோ விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு வந்திறங்கிய ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த ஷபீர் அகமது(35) மறைத்து எடுத்து வந்த 150 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.9 லட்சம். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.50 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT