

சென்னை: ‘‘அரசு பெண் ஊழியர்களின் 3-வது குழந்தைக்கும் இனி ஓராண்டு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்’’ என்று சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பதிலளித்த துறை அமைச்சர் சரத்குமார் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாக இருப்பதால், அரசு பெண் பணியாளர்களின் 3-வது குழந்தைக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக (ஓராண்டு) உயர்த்தி வழங்கப்படும். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘வெற்றிப் பாதை’ என்ற செயலி ரூ.2 லட்சம் செலவில் உருவாக்கப்படும். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் சமூக ஊடகக் கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்படும்.
பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் ரூ.1 கோடி செலவில் கணினி ஆய்வகம், ரூ.2.25 கோடி மதிப்பில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். அரசு சேவைகளைப் பொதுமக்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் வழங்கும் வகையில் எளிமை ஆளுமை என்ற முன்முயற்சியின் கீழ் அனைத்து அரசு சேவைகள், உரிமங்கள், சான்றிதழ்கள் தடையின்மை சான்றிதழ்கள் (என்ஓசி), ஒப்புதல்கள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட்டு எளிமைப்படுத்தப்படும். இவ்வாறு பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சரத்குமார் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய பாமக உறுப்பினர் சவுமியா அன்புமணி, ‘‘டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொகுப்பூதியப் பணியாளர்களாக உள்ளனர். குறிப்பாக குரூப்-4 பணி நிலையில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றையும் விரைவாக நிரப்ப வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
அதற்கு அமைச்சர் சரத்குமார் பதில் அளிக்கையில், ‘‘டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களை நியமிப்பது தமிழக ஆளுநர்தான். காலி இடங்களை நிரப்புவது குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. காலி இடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.