வருமான வரி அதிகாரி போல் நடித்து 50 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை

வருமான வரி அதிகாரி போல் நடித்து 50 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை
Updated on
1 min read

மானாமதுரையில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 50 பவுன் நகை, ரூ. 6 லட்சம் கொள்ளையடித்துள்ளனர்.

மானாமதுரை தென்றல் நகரைச் சேர்ந்தவர் ராதா. அடகு தொழில் செய்து வரும் இவரது வீட்டுக்கு, வியாழக்கிழமை 2 கார்களில் டிப்-டாப் நபர்கள் 7 பேர் வந்துள்ளனர்.

ராதாவின் மனைவியிடம், நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் ‘ரெய்டுக்கு’ வந்துள்ளதாக மிரட்டியுள்ளனர். லைசென்ஸ் இல்லாமல் அடகு தொழில் நடத்தி, அரசுக்குரிய வரிகளைக் கட்டாமல் ஏமாற்றும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம் என எச்சரித்துள்ளனர்.

ராதாவையும் அங்கு வரவழைத்த அந்த நபர்கள், ராதாவிடம் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்து, 50 பவுன் நகைகள், ரூ. 6 லட்சம் பணத்தை பறிமுதல் செய்வதாகவும், உரிய கணக்குகளை மதுரை அலுவல கத்துக்கு வந்து தாக்கல் செய்து விட்டு, மீட்டுக்கொள்ளலாம் எனவும் கூறி புறப்பட்டுள்ளனர்.

அதற்கு, ராதா, உங்கள் போன் நம்பர் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நபர்கள் ராதாவைத் தாக்கிவிட்டு வீட்டுக்குள் பூட்டிவிட்டு கார்களில் தப்பினர்.

மாலையில் ராதாவின் மகன் வந்து பூட்டைத் திறந்துள்ளார். அப்போது நடந்த விவரத்தைக் கூறி அழுதனர். இதுபற்றி மானாமதுரை போலீஸில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. புருசோத்தமன் விசாரணை செய்து வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in