Published : 17 Mar 2015 10:54 PM
Last Updated : 17 Mar 2015 10:54 PM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து விசாரணை அறிக்கை: பட்ஜெட் தொடரில் தாக்கல்

மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பான நீதிபதி ரகுபதி கமிஷன் அறிக்கை சட்டப்பேரவையில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.கே கவுல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒப்பந்தம் பெறுவதற்கான விண்ணப்பத்தை பெறாமலேயே கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. கட்டுமானம் பற்றிய பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்படவில்லை என்று ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும்போது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தரப்பில் குறிப்பிடப்பட்டது.

அப்போது, கட்டிட விபத்து தொடர்பான நீதிபதி ரகுபதி கமிஷன் அறிக்கை குறித்து ஸ்டாலின் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது..

நீதிபதி ரகுபதி கமிஷன் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் மூர்த்தி தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட அமர்வு, வரும் ஜூன் மாதம் அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x